இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்சேக்களை விரட்டியடித்த 'புரட்சியாளர்கள்' வக்கீல்- கலங்கும் 'தலை'கள்!
கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி பதவியில் இருந்து ஜனாதிபதி மாளிகையில் இருந்தும் கோத்தபாய ராஜபக்சேவையும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சேவையும் விரட்டியடித்து நாட்டை விட்டு தப்பி ஓட வைத்த கொழும்பு புரட்சியாளர்களின் வழக்கறிஞர் நுவன் போபகே களமிறங்கியிருப்பது முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களை கலங்க வைத்திருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அடுத்த மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் விக்கிரமசிங்கே, ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாமல் ராஜபக்சே, ஜேவிபியின் அநுர குமார திசாநாயக்க, 7 தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் ஆகியோர் முக்கியமான வேட்பாளர்கள். இவர்களுடன் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விஜயதாச ராஜபக்சே, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோரும் களம் காண்கின்றனர்.

இந்த அறியப்பட்ட முகங்கள் அல்லது தலைவர்களைத் தாண்டி இன்னொருவரது பெயர்தான் இப்போது இலங்கை ஜனாதிபதி தேர்தலில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. அவரது பெயர் நுவன் போபகே.
வங்கதேசத்துக்கு முன்னோடியான இலங்கை புரட்சி: இலங்கையில் 2022-ம் ஆண்டு ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்சே, பிரதமராக மகிந்த ராஜபக்சே பதவி வகித்து வந்தனர். அப்போது இலங்கையின் பொருளாதாரம் பேரழிவைச் சந்தித்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை நாசமானது. இதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதற்காக இலங்கை மக்கள் ஒன்று திரண்டு கொழும்பில் புரட்சியில் இறங்கினர். இந்தப் புரட்சி உலகையே அதிரவைத்தது. இலங்கை மக்கள் புரட்சியால் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே முதலில் பதவி விலகிய கையோடு உயிருக்கு பயந்து நாட்டை விட்டு தப்பி ஓடினார். அவரைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவும் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பி ஓடினர். இருவரும் உயிருக்கு பயந்து வெளிநாடுகளில் பதுங்கி இருந்துவிட்டு பின்னர் இலங்கை திரும்பினர். இந்தப் புரட்சியைத் தொடர்ந்து இலங்கையின் ஜனாதிபதியானார் ரணில் விக்கிரமசிங்கே.
புரட்சியாளர்களின் வழக்கறிஞர் நுபன் போபகே: ராஜபக்சே குடும்பத்தின் மீது 'கொலைவெறி'யில் இருந்த புரட்சியாளர்களின் வழக்கறிஞர்தான் நுபன் போபகே. இந்த முறை ஜனாதிபதி தேர்தலில் நுவன் போபகேவும் களம் காண்கிறார். இலங்கையில் ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்கே ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை. இலங்கை இன்னமும் பொருளாதார நெருக்கடியில் இருந்து முழுமையாக மீளவும் இல்லை. இந்த நிலையில்தான் இலங்கை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெறுகிறது.
தாக்கம் ஏற்படுத்துவாரா?: இந்த தருணத்தில் வங்கதேசத்தில் நடைபெற்ற மக்கள் புரட்சி, இலங்கையின் புரட்சியை மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. இது அடுத்த மாதம் இலங்கையில் நடைபெற உள்ள தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? இல்லையா? என்பது உறுதியானதாக இல்லை. கொழும்பு புரட்சியில் கை கோர்த்த அத்தனை லட்சம் பேருமே நுவன் போபகேவுக்குதான் ஓட்டுப் போடுவார்கள் என சொல்ல முடியுமா? என்பதும் தெரியாது. ஆனாலும் மக்களின் மவுனம் எப்போது வெடிக்கும் என யாருக்கும் தெரியாது என்பதால் இலங்கை ஜனாதிபதி தேர்தல் களத்தில் நிற்கும் ரணில், சஜித் , அநுர, நாமல் உள்ளிட்டோருக்கு நுவன் போபகே பெயரே பெரும் அச்சுறுத்தலாகவும் குடைச்சலாகவும் இருக்கிறது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications