7 மாத காத்திருப்பு.. ஒரே ஒரு பயணிக்காக.. மச்சு பிச்சுவை திறந்து விட்ட பெரு.. பெரிய மனசுதான்!
லிமா: ஒரேயொரு ஜப்பான் பயணிக்காக உலக பாரம்பரிய சின்னமான மச்சு பிச்சை திறந்துள்ளது பெரு அரசு.
பெரு நாட்டில் கஸ்கோ நகரிலிருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள உருபாம்பா பள்ளத்தாக்கின் மலைத்தொடரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க பழைய நகரம் மச்சு பிச்சு. கி.பி.1450-ல் இன்கா பேரரசு காலத்தில் கட்டப்பட்ட இந்நகரம் புதிய ஏழு உலக அதிசயங்களில் ஒன்று.

மச்சு பிச்சுவை கடந்த 1983ம் ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது யுனெஸ்கோ. கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் உலகின் மிக முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. மச்சு பிச்சுவுக்கு நாள்தோறும் 3000 பார்வையாளர்கள் வருகை தந்து வந்தனர்.
கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட பிரச்சினையால் மச்சு பிச்சுவுக்கு செல்ல பெரு அரசு தடைவிதித்திருந்தது. இதனால் கடந்த ஏழு மாதங்களாக மச்சு பிச்சு மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரேயொரு ஜப்பான் பயணிக்காக மச்சு பிச்சை பெரு அரசு திறந்துள்ளது. மச்சு பிச்சுவை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் கடந்த மார்ச் பெரு வந்தார் ஜப்பான் நாட்டை சேர்ந்த ஜெஸ்சி டாகயாமா. ஆனால் கொரோனா பிரச்சினையால் சுற்றுலா தளங்கள் மூடப்பட்டு விட்டதால் அவரால் மச்சு பிச்சு செல்ல முடியவில்லை.
இதனால் ஏமாற்றமடைந்த டாகயாமா மச்சு பிச்சுவை பார்த்து விட்டுதான் ஜப்பான் திரும்ப வேண்டும் என முடிவு செய்து பெருவிலேயே தங்கிவிட்டார். ஏழு மாதங்களுக்கு பிறகு அவரது கோரிக்கை ஏற்றுக்கொண்ட பெரு அரசு, அவர் ஒருத்தருக்காக மட்டும் மச்சு பிச்சுவை திறக்க அனுமதித்தது.
இதையடுத்து டகாயாமா தனி ஒருத்தராக மச்சு பிச்சுவை ஆசைத்தீர சுற்றிப்பார்த்துவிட்டு தாய்நாடு திரும்பி இருக்கிறார். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக அடுத்த மாதம் முதல் மச்சு பிச்சு திறக்கப்படும் என பெரு அரசு அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications