எரிகிற தீயில் எண்ணெய்.. கடும் பஞ்சத்திற்கு மத்தியில் டீசல் விலையை உயர்த்திய பாக்.. அதிர்ந்த மக்கள்!
பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது.
இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பரிதவித்து வரும் நிலையில், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது பெட்ரோல் டீசல் விலையும் உயர்ந்து இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. அதைத்தொடர்ந்து கட்டுங்கடங்காத வெள்ளமும் ஏற்பட்டது. பாகிஸ்தானின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தால் கோடிக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நாசம் அடைந்தன.
பயிர் சாகுபடியும் சுமார் 80 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டது. இதனால், அங்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பரபரக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. நாளை மறுநாள் வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது
பண வீக்கம் அதிகரிப்பு
அதேபோல பாகிஸ்தான் அரசுக்கு ஐ.எம்.எப் கொடுக்க இருந்த ரூ.5.29 லட்சம் கோடி டாலரும் நிறுத்தி வைக்கப்பட்டது. பண வீக்கம் அதிகரிப்பு, அந்நிய செலாவணி கையிருப்பு வீழ்ச்சி என நாலாபுறமும் கடும் பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது. மக்களின் முக்கிய உணவாக இருக்கும் கோதுமை மாவு மற்றும் பருப்பு விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பாகிஸ்தானின் அந்நிய செலாவணி கையிருப்பும் வேகமாக குறைந்து வருகிறது. தற்போது சுமார் ரூ.47,560 கோடி அளவில் மட்டுமே அந்நிய செலாவணி கையிருப்பில் உள்ளது. இது ஓரிரு மாதங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. எனவே இதனை உயர்த்த வேண்டிய கட்டாயத்திலும் பாகிஸ்தான் அரசு இருக்கிறது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலை தடாலடியாக ரூ.35 (பாகிஸ்தான் மதிப்பில்) உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடும் விலைவாசி உயர்வு பணவீக்கத்தால் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கும் சூழலில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வகையில் பாகிஸ்தான் அரசின் அறிவிப்பு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
நிதி அமைச்சர் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை பாகிஸ்தான் நிதி அமைச்சர் இஷாக் தார் இன்று வெளியிட்டார். இன்று காலை 11 மணி முதலே இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது. தற்போது உயர்த்தப்பட்ட விலையுடன் சேர்த்து பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 249.80 ஆகவும் டீசல் விலை ரூ. 262.80 லிட்டராகவும் உள்ளது. மண்ணெண்ணெய் மற்றும் லைட் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ. 18 உயர்த்தப்பட்டுள்ளது.
படையெடுக்கும் வாகன ஓட்டிகள்
பாகிஸ்தானில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பெட்ரோல் விலை உயரத்தப்படவில்லை என்றும் சர்வதே சந்தையில் 11 சதவீதம் அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்து விட்டதாகவும் பாகிஸ்தான் நிதி அமைச்சர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளார். இதற்கிடையே இன்று காலை முதலே நாட்டில் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்த்தப்பட இருப்பதாக அந்த நாட்டு மக்கள் மத்தியில் தகவல் பரவியது. இதனால், வாகன ஓட்டிகள் சாரை சாரையாக பெட்ரோல் பங்குகளை நோக்கி படையடுத்தனர். இன்னும் சொல்லப்போனால் பல கி.மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது என சொல்லும் அளவுக்கு அங்கு வாகன ஓட்டிகள் பெட்ரோல் பங்குகளை நோக்கி திரண்டனர்
மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்புதான் பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரியின் பின்னால் மக்கள் ஓடும் காட்சிகள் அங்கு மக்கள் படும் திண்டாட்ட நிலையை வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் இருந்தது. ஆனால்,
20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.3,100-க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியானது. தற்போது எரிபொருள் விலையும் கடுமையாக உயர்த்தப்பட்டு இருப்பது அந்த நாட்டு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது.