வாஷிங் மெஷினுக்குள் சிக்கிய 3 வயது சிறுமி... காப்பாற்றப் போராடிய பாதுகாப்பு படையினர்!
ரியாத்: சவுதியில் வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்ட 3 வயது சிறுமியை பாதுகாப்பு படையினர் போராடிக் காப்பாற்றிய புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
துருதுரு பிள்ளைகள் மீது எப்போதுமே வீட்டில் இருப்போர் ஒரு கண் வைத்திருக்க வேண்டும். அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் குறும்பாக அக்குழந்தைகள் செய்யும் செயல்கள் விபரீதத்தில் முடிந்து விடும் வாய்ப்புகள் அதிகம்.
அப்படித் தான் சவுதி அரேபியாவில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி, எதிர்பாராதவிதமாக வாஷிங் மெஷினுக்குள் சிக்கிக் கொண்டார். இது தொடர்பாக தகவலறிந்து அந்நாட்டின் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
போராட்டம்...
குழந்தையை உயிருடன் மீட்க அவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். பலமணி நேர போராட்டத்துக்கு பின்னர், வாஷிங் மெஷினை வெட்டி அந்த குழந்தையை காப்பாற்றினார்கள்.
புகைப்படங்கள்...
பாதுகாப்பு படையினர் குழந்தையை மீட்க போராடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அவை தற்போது சமூகவலைதளப் பக்கங்களில் வேகமாக பரவி வருகிறது.
பாராட்டும், திட்டும்...
பாதுகாப்பு படையினரைப் பாராட்டும் அதே சமயத்தில், அஜாக்கிரதையாக இருந்த குழந்தையின் தாயையும் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.
ஆதரவு கருத்து...
அதேசமயம், அந்த தாய்க்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் சில தாய்மார்கள், 'சில குழந்தைகள் எப்போதும் துறுதுறுவென குறும்பு வேலைகளை செய்வதிலேயே குறியாக இருக்கும்போது, நாம் எவ்வளவு கண்டித்தாலும், விளையாட்டு புத்தியில் இதைப்போல் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன' என்றும் கூறி வருகின்றனர்.