ஒபாமா, 11 அமெரிக்க நிறுவன சி.இ.ஓ.க்களை சந்திக்கும் மோடி
நியூயார்க்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பிரபல 11 அமெரிக்க நிறுவனங்களின் சிஇஓக்களை இன்று சந்திக்க உள்ளார். மேலும் அவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவையும் இன்று சந்தித்து பேசுகிறார்.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அதிபர் பாரக் ஒபாமாவை இன்று சந்தித்து பேசுகிறார். முன்னதாக அவர் பிரபல 11 அமெரிக்க நிறுவனங்களின் சி.இ.ஓ.க்களை சந்தித்து பேசுகிறார். அவர் கூகுள் நிறுவனத்தின் எரிக் ஸ்மிட், பெப்சிகோ நிறுவன தலைவர் இந்திரா நூயி, போயிங் தலைவர் ஜேம்ஸ் மெக்நெர்னி ஜுனியர், பிளாக் ராக் தலைவர் லாரன்ஸ் ஃபின்க், ஐபிஎம் தலைவர் கினி ரோமெட்டி, ஜெனரல் எலக்ட்ரிக் சி.இ.ஓ. ஜெப்ரி ஆர். இமெல்ட், கோல்ட்மேன் சாக்ஸ் தலைவர் லாய்ட் பிளாங்க்ஃபெய்ன், கோல்பெர்க் கிராவிஸ் ராபர்ட்ஸ் அன்ட் கோ தலைவர் ஹென்றி கிராவிஸ் உள்ளிட்டோரை தனித்தனியாக 15 முதல் 20 நிமிடங்கள் சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்புகளின்போது ஆசியாவிலேயே இந்தியா தான் முதலீடு செய்ய சிறந்த இடம் என்று அவர்களிடம் மோடி தெரிவிக்க உள்ளார். அமெரிக்கா கிளம்பும் முன்பு மோடி மேக் இன் இந்தியா பிரச்சாரத்தை துவங்கினார். இந்தியாவில் முதலீடு செய்ய வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படும் என்று மோடி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஏதுவாக சட்டதிருத்தங்கள் கொண்டு வரப்படும் என்று நியூயார்க் நகரில் உள்ள மேடிசன் ஸ்கொயரில் பேசிய மோடி தெரிவித்தார்.
நூயியை சந்திக்கையில் பெப்சி தயாரிப்புகளில் பழச்சாறை கலக்க முடியுமா என்று மோடி கேட்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மோடி ஒபாமாவை நாளையும் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.