உலகின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியல்: மோடி 'இன்', சோனியா 'அவுட்'
நியூயார்க்: போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு 15வது இடம் கிடைத்துள்ளது.
போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 72 பெயர்கள் அடங்கிய அந்த பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல் இடத்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளார். இரண்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்ளார்.
அந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளவர்களில் சிலரை பார்ப்போம்,
மோடி
பிரதமர் நரேந்திர மோடி உலகின் 15வது சக்திமிக்க தலைவராக உள்ளார். மோடியை இந்து தேசியவாதி என்று போர்ப்ஸ் பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் புதிய ராக்ஸ்டார் பாலிவுட்டில் இருந்து வரவில்லை. தேர்தலில் அமோக வெற்றி பெற்றி கடந்த மே மாதம் புதிய பிரதமராக மோடி பதவியேற்றார். பாஜக பல ஆண்டுகள் கழித்து காந்தி வம்சத்திடம் இருந்து அதிகாரத்தை பெற்றுள்ளது என போர்ஸ் தெரிவித்துள்ளது.
|
12 புதியவர்கள்
மிகவும் சக்திவாய்ந்தவர்கள் பட்டியலில் இந்த ஆண்டு மோடி, எகிப்து அதிபர் அப்துல் எல் சிசி உள்பட 12 புதியவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சோனியா
கடந்த ஆண்டு பட்டியலில் 21வது இடத்தில் இருந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பெயர் இந்த ஆண்டு பட்டியலில் இல்லை.
அலிபாபா, ஐஎஸ்ஐஎஸ்
அலிபாபா நிறுவனரும், சீனாவின் பணக்கார மனிதருமான ஜேக் மா மற்றும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி ஆகியோரும் போர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
அம்பானி
போர்ப்ஸ் பட்டியலில் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 36வது இடத்திலும், ஆர்சிலர் மிட்டல் தலைவர் மற்றும் சிஇஓ லக்ஷ்மி மிட்டல் 57வது இடத்திலும், மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெல்லா 64வது இடத்திலும் உள்ளனர்.
ஜின்பிங்
சீன அதிபர் ஜின்பிங் 3வது இடத்திலும், போப் பிரான்சிஸ் 4வது இடத்திலும், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் 5வது இடத்திலும், பில் கேட்ஸ் 7வது இடத்திலும் உள்ளனர்.
காமரூன்
இங்கிலாந்து பிரதமர் டேவிட் காமரூன் 10வது இடத்திலும், கூகுள் நிறுவனர்கள் லாரி பேஜ், செர்கி ப்ரின் 9வது இடத்திலும் உள்ளனர்.
பெண்கள்
பெட் தலைவர் ஜானட் எல்லன் 6வது இடத்தில் உள்ளார். 2 பெண்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளது இதுவே முதல் முறை என்று போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.