இந்தியா - இஸ்ரேல் உறவு புதிய உச்சத்தை எட்டும்: பிரதமர் மோடி பேச்சு
டெல் அவிவ்: மும்பை - டெல் அவிவ் விமான சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இந்தியா, இஸ்ரேல் உறவு புதிய எச்சத்தை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அரசு முறை பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்தார். பின்னர் இரு நாடுகளிடையே விண்வெளி ஆய்வு, வேளாண் தொழில் நுட்படம், நீர் மேலாண்மை உள்ளிட்ட 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதையடுத்து டெல் அவிவ் நகரில் இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்நிகழ்ச்சியில் 6 ஆயிரம் இந்தியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பேசுகையில்,'நமஸ்தே' இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஒரு ஆழமான உறவை வெளிப்படுத்தும் நிகழ்வு இது. இரு நாடுகளுக்கு இடையே எப்போதும் உறவுப் பாலம் உள்ளது. இந்தியர்கள் மத்தியில் உரையாட வந்துள்ள எனது ஆருயிர் நண்பர் மோடியை வரேவற்கிறேன் என்று கூறினார்.
பின்னர் மோடி பேசுகையில், இந்திய - இஸ்ரேல் உறவு புதிய உச்சத்தை எட்டும். இரு நாடுகள் இடையே இரண்டாயிரம் ஆண்டு உறவு இருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்திய - இஸ்ரேல் தோழோடு தோழாக பயணிக்கும். 2022 ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இந்தியாவில் அனைவருக்கும் வீடுகள், தண்ணீர், மின்சாரம் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகிய மூன்றும் எனது அரசின் தாரக மந்திரங்கள். ஜி.எஸ்.டி., வரி சீர்திருத்தத்திற்கு சிறந்த முன்னுதாரணம். 'மேக் இன் இந்தியா' மூலம் இந்தியாவில் ஒரு பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்கின்றனர். அதேபோல் இஸ்ரேலின் புதிய கண்டுபிடிப்புகள், வேளாண் உயிர்தொழிட்நுட்பம் ஆகியவை ஆச்சர்யமளிக்கின்றன. இஸ்ரேலில் இந்திய கலாச்சார மையம் திறக்கப்படும். டெல்லி - மும்பை - டெல் அவிவ் விமான சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.