வந்துட்டார் வக்கீல். யாழ்.க்கு மோடி போனது இலங்கையில் இந்திய தலையீடாம்.. சொல்வது சீனா அறிவுஜீவிஸ்!
பெய்ஜிங்/கொழும்பு: இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டது அந்நாட்டு விவகாரத்தில் இந்தியாவின் தலையீடு என்று விமர்சித்திருக்கின்றனர் சீனா அறிவுஜீவிகள்.
அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, ஈழத் தமிழரின் தாயக பிரதேசமான யாழ்ப்பாணத்துக்கும் சென்றார். அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
மிக நீண்டகாலத்துக்குப் பின்னர் இலங்கையின் வடக்கு மாகாணத்துக்கு இந்திய பிரதமர் ஒருவர் செல்வது இதுவே முதல் முறை. ஆனால் 'இந்திய பிரதமர் மோடியின் யாழ்ப்பாணம் பயணம் இலங்கை விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டை காட்டுகிறது" என்று சீனாவின் குளோபல் டைம்ஸ் ஏட்டில் சீனா அறிவுஜீவிகள் சிலர் குமுறி உள்ளனர்.
சர்வதேச ஆய்வுகளுக்கான ஷாங்காய் நிறுவனத்தின் ஆய்வாளர் லியு ஜோங்கி தமது கருத்தாக, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் தொடர்பான செய்தி ஊடகங்கள் வாயிலாக சீனா உள்பட பல்வேறு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது, அவர்களில் பெரும்பாலானோர் இலங்கை, சீனாவின் முதலீட்டை நிறுத்திய நிலையில், டெல்லியின் கை ஓங்கிவிட்டதாக நினைக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
மேலும், இந்திய பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது, வடக்கு மாகாணத்தில் தமிழர்கள் அதிகமாக வாழும் யாழ்ப்பாணம் சென்றதில் இருந்து, இலங்கையின் உள்விவகாரத்தில் இந்தியா தலையிடுகிறது என்ற உண்மை வெளிப்படுகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எச்சரிக்கை
அதேபோல் இந்தியா, இலங்கை இடையே வரலாற்று ரீதியாக தமிழர் பிரச்சனை, மீன்பிடி பிரச்சனை இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் எந்த நேரத்திலும் இருதரப்பிலும் ஒரு கடினமான நிலை உருவாகவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
"இலங்கை அரசு குறிப்பிட்ட லாபங்களுக்காக சீனாவின் நல்லெண்ணத்தைப் புறக்கணித்தால், சர்வதேச சமூகத்திடமிருந்து கவுரவத்தைப் பெறுவதும் கடினமானதாகத்தான் இருக்கும் என்று குளோபல் டைம்ஸ் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.