அமெரிக்காவில் மீண்டும் கடும் பனிப்பொழிவு: குளிரில் உறைந்த நியூயார்க்
நியூயார்க்: அமெரிக்காவை நடுங்க வைத்த போலார் வோர்டெக்ஸ் என்னும் துருவ பனிப்புயல் தற்போது மீண்டும் வந்து தாக்கியுள்ளது. இம்முறை போலார் வோர்டெக்ஸால் நியூயார்க் நகரம் தான் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல்வேறு பகுதிகள் மற்றும் கனடாவை போலார் வோர்டெக்ஸ் என்னும் துருவ பனிப்புயல் அண்மையில் தாக்கியது. இதனால் புயல் தாக்கிய இடங்களில் உள்ள மக்கள் கடுங்குளிரால் அவதிப்பட்டனர். இந்த பனிப்புயலால் சாலை மற்றும் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் போலார் வோர்டெக்ஸ் மீண்டும் நேற்று அமெரிக்காவை தாக்கியுள்ளது.
போலார் வோர்டெக்ஸ் 2
இம்முறை தாக்கிய போலார் வோர்டெக்ஸ் 2 முன்பை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க்
இம்முறை கடுங்குளிர் காற்றுடன், பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இந்த தடவை நியூயார்க் நகரம் தான் பனிப்புயலில் சிக்கித் தவித்து வருகிறது.
பனிக்காடு
நியூயார்க்கில் திரும்பும் திசை எல்லாம் பனிக்காடாக உள்ளது. முன்னதாக நியூயார்க்கில் 5 இன்ச் அளவுக்கு பனி இருந்தது தான் அதிக அளவாக இருந்தது. ஆனால் நேற்று நியூயார்க்கில் உள்ள சென்ட்ரல் பார்க்கில் இதுவரை இல்லாத அளவுக்கு 7.1 இன்ச் அளவுக்கு பனி இருந்தது.
மேலும் பனி
ஏற்கனவே பல்வேறு இடங்கள் பனியில் மூடியிருக்கும் நிலையில் இன்று மேலும் பனிப்பொழிவு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.