மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்: பிரபஞ்ச அழகிப்போட்டியில் பதாகை ஏந்திய மியான்மர் அழகி
மிஸ் யுனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்ற போட்டியாளர் மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ‘‘மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்’’ என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார் அனைவரின் ஆதரவையும் கோரினார்.
புளோரிடா: பிரபஞ்ச அழகிப்போட்டியில் மியான்மர் நாட்டின் சார்பில் பங்கேற்ற துசர் விண்ட் லவின் என்கிற அழகி மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ''மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்'' என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றுள்ளார்.
69வது பிரபஞ்ச அழகி போட்டி அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஹாலிவுட் நகரில் உள்ள ராக் ஓட்டல் அண்ட் கேசினோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. 74 நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
மெக்சிகோ நாட்டை சேர்ந்த 26 வயதான ஆண்ட்ரியா மெஸாவும், 28 வயதான பிரேசிலின் ஜூலியா காமாவும் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர். இதில் பிரபஞ்ச அழகியாக மெக்சிகோவின் ஆண்ட்ரியா மெஸா அறிவிக்கப்பட்டார்.

கவனத்தை கவர்ந்த பதாகை
பிரபஞ்ச அழகி போட்டியில் மியான்மர் நாட்டை சேர்ந்த துசர் விண்ட் லவின் பங்கேற்றார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் அதற்கு முந்தைய சுற்றுகளில் பங்கேற்றார். அப்போது, அழகி போட்டி நடைபெறும் மேடையில் துசர் விண்ட் லவின் தனது கையில் ஒரு பதாகையுடன் வந்தார். அந்த பதாகையில் 'மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என எழுதப்பட்டிருந்தது.

ராணுவத் தாக்குதல்
மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் ராணுவ ஆட்சி நடைபெற்று வருகிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது மியான்மர் ராணுவத்தினர் கடுமையான ஒடுக்குமுறைகளை பின்பற்றி வருகின்றனர். மியான்மரில் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் 790 பேர் உயிரிழந்துள்ளனர்.

பலியாகும் மக்கள்
மியான்மரில் ராணுவம் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் வன்முறையை உலகநாடுகளுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், உலக நாடுகள் தங்களுக்க்கு உதவவேண்டும் என்பதற்காகவே பிரபஞ்ச அழகி போட்டியில் 'மியான்மருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்' என்ற பதாகையுடன் துசர் விண்ட் லவின் பங்கேற்றார்.

ஆதரவு கொடுங்கள்
துசர் விண்ட் லவின் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றார். அதன் பின்னர் அவர் பேசியபோது ''எங்கள் மக்கள் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறார்கள். ராணுவத்தால் சுடப்படுகிறார்கள். மியான்மரை பற்றி பேச அனைவரையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்றார்.

ஆட்சிக்கவிழ்ப்பு
பிரபஞ்ச அழகியின் மியான்மர் போட்டியாளர் என்கிற முறையில் ஆட்சி கவிழ்ப்பு முதல் என்னால் முடிந்த வரை நான் பேசிக்கொண்டு இருக்கிறேன். எல்லோரும் மியான்மருக்காக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.












Click it and Unblock the Notifications