பஞ்சாப் முதல்வர் தேர்வில் இம்ரான்கான் கட்சிக்கு ஏமாற்றம்.. பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் -என் (பிஎம்எல்-என்) கட்சியின் ஷெபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மகன் ஹாம்சா ஷாபஸ் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில முதல்வராக உள்ளார்.

20 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
இந்நிலையில் பஞ்சாப் மாகாணத்தில் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சட்டசபை இடைத்தேர்தல் நடந்தது. இதற்கான தேர்தல் முடிவில் எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி 15 இடங்களில் அபார வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாகாணத்தை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளர்கள் 4 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றனர்.

ஆளும் கட்சி பலம் இழப்பு
இதனால் அங்கு ஆட்சி மாற்றத்துக்கான சூழல் ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாகாண சட்டசபையில் மொத்தம் 369 எம்எல்ஏக்கள் உள்ளனர். ஆட்சியமைக்க 185 எம்எல்ஏக்கள் வேண்டும். தற்போதைய தேர்தல் முடிவால் ஆளும் பிஎம்எல்-என் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 167 ஆகவும், கூட்டணியில் உள்ள பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு 7 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். அதேநேரத்தில் இம்ரான் கானின் கட்சி எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 178 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 6 சுயேச்சை, இன்னொரு கட்சியை சேர்ந்த ஒருவர் உள்ளனர்.

இம்ரான் கான் கட்சிக்கு ஆதரவு
இதனால் இம்ரான் கான் கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது. அதேநேரத்தில் சுயேச்சை உள்பட பிற எம்எல்ஏக்களின் ஆதரவுடன் ஆட்சியை தொடர ஹாம்சா ஷாபஸ் முயற்சி எடுத்தார். அடுத்த முதல்வருக்கான தேர்வில் தற்போதைய முதல்வர் ஹாம்சா ஷாபசுக்கு 179 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தது. அதேநேரத்தில் இம்ரான் கானின் கட்சி சார்பில் முதல்வர் பதவிக்கு போட்டியிட்ட பர்வேஸ் இலாய்க்கு 186 பேரின் ஆதரவு கிடைத்தது.

செல்லாது என அறிவிப்பு
இதையடுத்து பர்வேஸ் இலாய் முதல்வர் ஆவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கான 10 எம்எல்ஏக்களின் ஆதரவு செல்லாது என துணை சபாநாயகர் டோஸ்ட் முகது மசாரி அறிவித்தார். இதனால் முதல்வர் ஹாம்சா ஷாபஷ் முதல்வராக தொடர்கிறார். அதோடு பஞ்சாப் மகாண அரசியலில் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.

போராட்டம்
இந்நிலையில் தான் இம்ரான் கான் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனடிப்படையில் பாகிஸ்தானில் போராட்டங்கள் வெடிக்க துவங்கி உள்ளன. இஸ்லாமாபாத், கராச்சி, முல்தான், லாகூர், பெஷாவர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் வீதிகளில் இறங்கி இம்ரான் கான் கட்சியினர் போராட்டத்தை துவங்கி உள்ளனர். இதற்கிடையே துணை சபாநாயகரை எதிர்த்து அக்கட்சியினர் அந்த நாட்டின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications