மலேசியா போனாலும் மனசெல்லாம் அரசியல் சிந்தனை... மக்கள் மன்ற செயலியை கண்காணித்த ரஜினி!
நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய செல்போனில் ரசிகர் மன்ற செயலியை கண்காணிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
Recommended Video
கோலாலம்பூர் : நடிகர் சங்க கட்டிட நிதி திரட்டுவதற்காக மலேசியா சென்றுள்ள திரைநட்சத்திரங்களுடன் நடிகர் ரஜினிகாந்தும் அங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகிறார். இந்நிலையில் ஸ்டேடியத்தில் அமர்ந்தவாறு ரஜினி தன்னுடைய செல்போனில் ரசிகர் மன்ற செயலியை பார்க்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகர் சங்க கட்டிடம் கட்ட நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் திரை நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சனிக்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் இந்த கலைநிகழ்ச்சியில் 300க்கும் மேற்பட்ட திரைப்படத் துறையினர் ஒரே விமானத்தில் புறப்பட்டு சென்று கலைநிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயமே அரசியல் அறிவிப்பு வெளியிட்ட கையோடு மலேசியா சென்றிருக்கும் ரஜினிகாந்த் தான். ரஜினி வெள்ளிக்கிழமையன்று தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடன் சேர்ந்து மலேசியா சென்றுள்ளார்.
ஆர்வம் காட்டும் நட்சத்திரங்கள்
ரஜினியுடன் சேர்ந்து தனிப்பட்ட முறையில் புகைப்படம் எடுத்துக் கொண்டு அதனை தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகின்றனர் சக சினிமாத் துறையினர். ஒரு பக்கம் முன்னணி நட்சத்திரம், மற்றொரு பக்கம் அரசியல் தலைவராக உருவெடுக்கப் போகிறார் என்ற உற்சாகத்தில் ரஜினியுடன் செல்ஃபிகளை கிளிக்கித் தள்ளுகின்றனர் திரைத்துறையினர்.
அரசியல் பேச்சுகளுக்கு ஓய்வு
ரஜினி மலேசியா சென்றுள்ளதால் கடந்த 4 நாட்களாக அவரின் ஆன்மிக அரசியல் பேச்சுகள் சற்று ஓய்ந்துள்ளன. டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்பட்ட ஆன்மிக அரசியல் பயணம், அடுத்தடுத்து தலைவர்கள் சந்திப்பு, ரசிகர்கள் பதிவுக்காக இணையதளம் என்று அனல் பறந்தது.
ரசிகர் மன்ற பெயர் மாற்றம்
ரஜினி மலேசியா சென்ற அடுத்த நாள் அவரது ரஜினி ரசிகர் மன்றம், மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது. உறுப்பினர் சேர்க்கைக்காக அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினியின் அகில இந்திய ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றமாக மாற்றப்பட்டது அனைவராலும் உற்று நோக்கப்பட்டது.
மலேசியாவில் இருந்தபடி கண்காணிக்கும் ரஜினி
இந்நிலையில் மலேசியா சென்றிருக்கும் ரஜினி அங்கு கலைநிகழ்ச்சிகளை பார்த்தபடியே தன்னுடைய செல்போனில் ரஜினி மக்கள் மன்ற செயலியை பயன்படுத்தும் புகைப்படம் வெளியாகியுள்ளது. தான் எங்கிருந்தாலும் தன்னுடைய அரசியல் பார்வையில் ரஜினி எவ்வளவு அக்கறை கொண்டவராக இருக்கிறார் என்பதன் சான்றாகவே இந்த புகைப்படம் இருப்பதாக அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.