சீனாவுக்கு ‛நோஸ்கட்’.. ரஷ்யாவில் புதின் செய்த சம்பவம்! ஜின்பிங்கை விட மோடிக்கு ராஜ மரியாதை.. அடடே
மாஸ்கோ: பிரதமர் மோடி ரஷ்யா சென்றுள்ள நிலையில் அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு சைலன்ட்டாக ‛நோஸ்கட்' செய்துள்ளார். அதாவது சமீபத்தில் ரஷ்யா சென்ற ஜி ஜின்பிங்கை விட பிரதமர் மோடிக்கு ராஜ மரியாதை கொடுக்கப்பட்டு இருப்பது தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளதோடு, சீனாவுக்கு வயிற்றெரிச்சலை உருவாக்கி உள்ளது.
நாம் அனைவரும் தளபதி படம் பார்த்திருப்போம். அதில் நடிகர் ரஜினி, நடிகர் மம்முட்டி இடையேயான பந்தம் இன்றும் கூட நட்புக்கு எடுத்துக்காட்டாய் கூறப்பட்டு வருகிறது. அப்படியான ஒரு பந்தம் தான் இந்தியா - ரஷ்யா இடையே நீண்ட காலமாக உள்ளது. இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் ரஷ்யா இந்தியாவுக்கு பக்கபலமாக இருந்து வருகிறது. இந்தியாவும் ரஷ்யாவிடம் இருந்து தான் ராணுவ தளவாடங்களை வழங்கி வருகிறது.

இந்த நட்புறவு இன்று வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கடுமையாக கண்டித்தன. அதுமட்டுமின்றி ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன. ஆனால் இந்தியா எந்த பொருளாதார தடையும் விதிக்காமல் உள்ளது.
இது ரஷ்யாவுக்கு இந்தியாவுக்கு காட்டும் கைமாறாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில் நம் நாடு என்பது அகிம்சையை விரும்புகிறது. இதனால் தான் உக்ரைன் போரை கைவிட்டு பிரச்சனைக்கு பேசி தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் வலியறுத்தி வருகிறார். இந்நிலையில் தான் இந்தியா-ரஷ்யா இடையேயான 22வது உச்சி மாநாடு ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றார்.
பிரதமர் மோடி சிறப்பு விமானத்தில் நேற்று ரஷ்யாவின் வினுகோவோ II விமான நிலையத்தில் இறங்கினார். பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதோடு பிரதமர் மோடியை ரஷ்யாவின் மூத்த துணை பிரதமர் (First Deputy Prime Minister)டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். அதன்பிறகு ராணுவ அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்று கொண்டார். பிறகு பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்தார். ரஷ்ய அதிபர் புதினின் நோவோ-ஓகாரியோவோவில் உள்ள இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்தது.
பிரதமர் மோடியை பார்த்த விளாடிமிர் புதின் அவரை சிரித்த முகத்துடன் வரவேற்றார். மேலும் அவரிடம் கைக்குலுக்கி, கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதன்பிறகு அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை என்பது திட்டமிடாத ஒன்றாகும். இதையடுத்து விளாடிமிர் புதின், பிரதமர் மோடிக்கு இரவு விருந்து வழங்கினார். இதையடுத்து இன்று இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்நிலையில் தான் பிரதமர் மோடி அங்கு சென்ற நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சீனாவுக்கு ‛நோஸ்கட்' செய்துள்ளார். அதாவது சமீபத்தில் ரஷ்யா சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங்கை விட பிரதமர் மோடிக்கு அதிக மரியாதையை விளாடிமிர் புதின் வழங்கி இருப்பது தற்போது பேசும் பொருளாகி உள்ளது. அதாவது கடந்த மார்ச் மாதம் ரஷ்ய அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவுக்கு சுற்றுப்பயணம் செய்து விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சவார்த்தை நடத்தினார்.
இந்த வேளையில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோ மற்றும் ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர். ஆனால் நேற்று ரஷ்யா சென்ற பிரதமர் மோடியை மூத்த துணை பிரதமர் டெனிஸ் மன்டுரோவ் வரவேற்றார். பிரதமர் மோடியை வரவேற்ற டெனிஸ் மன்டுரோவ் என்பவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்ற துணை பிரதமர் டிமிட்ரி செர்னிஷென்கோவை விட உயர் பதவியில் இருக்கிறார்.
அதாவது ரஷ்யாவில் துணை பிரதமர் பொறுப்பில் 5க்கும் அதிகமானவர்கள் உள்ளனர். இதில் மூத்தவர் யார் என்றால் டெனிஸ் மன்டுரோவ். அவர் தான் பிரதமர் மோடியை வரவேற்றுள்ளார். அதுமட்டுமின்றி நேற்று பிரதமர் மோடியை வரவேற்ற டெனிஸ் மன்டுரோவ், பிரதமர் மோடியுடன் அவர் ஓய்வெடுக்கும் ஹோட்டல் வரை சென்று விட்டார். இதுவும் அரிதான ஒரு நிகழ்வாகும். இதன்மூலம் சீனாவை விட இந்தியா தான் தனக்கு முக்கியம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சைலன்ட்டாக மெசேஜை உலகுக்கு தெரிவித்துள்ளதாக உலக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications