உக்ரைன் போர்.. பெலராஸில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன? பரபர தகவல்
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 5 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது.
போர் காரணமாக சுமார் பலரும் உக்ரைன் நாட்டை விட்டு வெளியேற அதன் எல்லைகளில் குவிந்துள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது,

பேச்சுவார்த்தை முயற்சி
இந்தச் சூழலில் அண்டை நாடான பெலாரஸ் நாட்டில் வைத்து உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக உள்ளதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யா உடன் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்புக் கொண்டார். அதன்படி உக்ரைன்-பெலாரஸ் எல்லையில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இரு தரப்பின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்ற இந்த அமைதி பேச்சுவார்த்தை இந்திய நேரப்படி திங்களன்று மதியம் 3.30 மணியளவில் தொடங்கியது.

5 மணி நேரம்
பெலராஸ் எல்லையில் நடந்து இந்த அமைதி பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் நீட்டித்தது. இது தொடர்பாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஸ்புட்னிக் வெளியிட்டுள்ள செய்தியில், "உக்ரைன் தரப்புடன் சுமார் ஐந்து மணி நேரம் நீடித்த பேச்சு வார்த்தை முடிவடைந்தது. இதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. இரு தரப்பும் ஒப்புக் கொள்ளக்கூடிய வகையிலான சில பொதுவான புள்ளிகளைக் கண்டறிந்தோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஆலோசிக்கப்பட்டது என்ன
இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் நாட்டில் உள்ள அனைத்து ரஷ்யப் படைகளையும் திரும்பப் பெற வேண்டும் என உக்ரைன் தரப்பு வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக உக்ரைன் அதிபர் மாளிகையின் ஆலோசகர் மைக்கேல் பொடோல்யாக் கூறுகையில், "இரு தரப்பும் முடிவுகள் எடுக்கப்படக் கூடிய பல முன்னுரிமை விவகாரங்கள் பற்றிய இதில் அடையாளம் கண்டுள்ளன. இவற்றைச் செயல்படுத்த வாய்ப்பு கிடைக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரு தரப்பு பிரதிநிதிகளும் சொந்த நாட்டு தலைநகர்களுக்கு திரும்பியுள்ளனர். மிக விரைவில் இரண்டாம் சுற்று அமைதி பேச்சுவார்த்தையும் நடைபெற வாய்ப்புகள் அதிகம்" என்று அவர் தெரிவித்தார்.
Recommended Video

விரைவில் இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் இன்று விவாதிக்கப்பட்ட விவகாரங்களில் நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படலாம் என்றும் மைக்கேல் பொடோல்யாக் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியான பின்னர் தான், ரஷ்ய ராணுவம் தனது தாக்குதலை நிறுத்தியுள்ளது. கடந்த 5 நாட்களாக நடைபெறும் இந்தப் போரில் ஏழு குழந்தைகள் உட்பட 102 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா சபை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications