சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம்..: யு.எஸ்.க்கு ரஷ்யா 'வார்னிங்
மாஸ்கோ: சிரியா கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதால் ஈராக்கில் உள்நாட்டுப் போரை நடத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளே பலனடைவர் என்று ரஷ்யா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கில் ஆளும் ஷியா முஸ்லிம் அரசுக்கு எதிரான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகின்றனர். ஈராக் அரச படைகள் வசமிருந்த ஏராளமான நகரங்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் வசமாகிவிட்டது.
அவர்கள் சிரியா- ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளை இணைத்து இஸ்லாமிய தனிநாட்டை பிரகடனம் செய்துள்ளனர். இதனிடையே இழந்த நகரங்களை மீட்பதற்காக ஈராக் படைகளுக்கு உதவ அமெரிக்காவின் ராணுவ ஆலோசகர்கள் அந்நாட்டில் முகாமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிராக போரிட ஈராக் நாட்டுக்கு 6 சுகோய் எஸ்யு-30 ரக விமானங்களை ரஷ்யா கொடுத்துள்ளது. இந்த நிலையில் சிரியாவில் போரிடும் கிளர்ச்சியாளர்களுக்கு ரூ3 ஆயிரம் கோடிக்கு ஆயுத உதவி அளிக்கப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த அறிவிப்புக்கு ரஷ்யாக கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கினால் ஈராக்கில் போரிடும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்குத்தான் அது பயனளிக்கும். இதனால் ஈராக் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்தும் உள்ளது.