கூடங்குளம் வருகிறார் ரஷ்ய அதிபர் புடின்
மாஸ்கோ: ரஷ்ய அதிபரான விளாடிமர் புடின், பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று அரசு முறைப் பயணமாக இந்தியா வர இருக்கின்றார். மேலும், தனது பயணத்தின்போது அவர் கூடங்குளம் அணு மின் நிலையத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான 15 ஆவது உச்சி மாநாடு அடுத்த மாதம் இந்தியாவில் நடக்க இருக்கின்றது.
இந்த மாநாட்டில் பல்வேறு வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக இருக்கின்றன. மேலும், பாதுகாப்புத்துறை, அணுசக்தித் துறை, சுற்றுலாத்துறை தொடர்பான பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன.
குறிப்பாக, கூடங்குளத்தின் ஐந்து மற்றும் ஆறாவது அணுமின் உலைகள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் இந்தியா வர இருக்கின்றார். அதற்கான பயணத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. உக்ரைன் பிரச்சனைகளால் அவருடைய பயணம் உறுதி செய்யப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவர் இந்தியா வருவது உறுதியாகியுள்ளது.
மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த பயணத்திட்டம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை என்றும் அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் ஆலோசகரும், செய்தித் தொடர்பாளருமான டிமிட்ரி, "ரஷ்ய அதிபர் விளாடிமர் புடின் இந்தியா வருவது உறுதியாகிவிட்டது. அதுவும் முக்கியமாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள கூடங்குளம் வருகையும் உறுதியாகிவிட்டது.
மேலும், நரேந்திர மோடியின் ஆலோசனையின் அடிப்படையில் அவருக்காக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பான இந்திய பாரம்பரிய உணவுகள் கொண்ட மதிய விருந்து ஒன்றிலும் புடின் கலந்து கொள்ள இருக்கின்றார்" என்று தெரிவித்துள்ளார்.
இந்திய தூதரக அதிகாரியான ராமன் இதுகுறித்து கூறுகையில், "அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா மற்றும் ரஷ்யாவிற்கு இடையேயான உறவினை பலப்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்களும் இதில் கையெழுத்தாகலாம். மேலும், "மேக் இன் இந்தியா" என்ற வகையில் ரஷ்யாவுடன் கூட்டாக இணைந்து இந்தியாவில் பொருட்களைத் தயாரிக்கும் ஒப்பந்தம் குறித்தும் மோடி, புடினுடன் ஆலோசனை நடத்தலாம்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
முந்தைய 14 மாநாடுகளைப் பொறுத்த வரையில் கிட்டதட்ட 128 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்த மாநாட்டினைப் பொறுத்த வரையில் கிட்டதட்ட 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்த விளாடிமர் புடின் ஒரு நாள் மட்டுமே இங்கு தங்கி இருந்தார். ஆனால், இந்த முறை அவர் நான்கு அல்லது ஐந்து தினங்கள் தங்கி இருப்பார் என்று செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.