சவுதியில் ஊழல் செய்த 200 பேர் கைது! - விரட்டி விரட்டி கைது செய்யும் இளவரசர்
சவுதி அரேபியாவில ஊழல் குற்றச்சாட்டின் பேரில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சவுதியில் மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழலில் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊழல் குற்றச்சாட்டில் 200 பேர் வரை கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் அண்மையில் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற பின்னர் பல அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சவுதியில் அரச குடும்பத்தில் உள்ள பலர் ஊழலில் ஈடுபட்டு வருவதாக சவுதி ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இதைத் தொடர்ந்து சவுதியில் ஊழலை முற்றிலும் ஒழிக்கும் முயற்சியில் முகம்மது பின் சல்மான் இறங்கிவிட்டார். அதன் தொடக்கமாக இவர் தலைமையில் சமீபத்தில் ஊழல் ஒழிப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
12 பேர் சிறையில் அடைப்பு
ஊழல் ஒழிப்புக் குழு அமைக்கப்பட்டு சில மணி நேரங்களில் அரசக் குடும்பத்தைச் சேர்ந்த 11 இளவரசர்கள் ஊழல் குற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டனர். மூன்று அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டது. முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் என 12 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சவுதியின் பெரும் பணக்காரர் ஆன அல் வலீத் பின் தலாலும் இளவரசர் குறியில் இருந்து தப்பவில்லை.
1,700 வங்கிக் கணக்குகள்
இதையடுத்து வியாழக்கிழமை மேலும் 12 பேர் 100 பில்லியன் டாலர் வரையில் ஊழல் செய்திருக்கலாம் என்று விசாரணைக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் 1,700 வங்கிக் கணக்குகளின் மீது ஊழல் தடுப்புக் குழு சந்தேகம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அட்டர்னி ஜெனரல் சவுத் அல் மொஜப்
இதுகுறித்து ஊடகங்களிடம் பேசிய ஊழல் தடுப்பு கமிஷனில் ஒருவரான சவுதியின் அட்டர்னி ஜெனரல் சவுத் அல் மொஜப் , ஊழல் வழக்குகள் தொடர்பாக இதுவரையில் விசாரணைக்காக 208 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். அதில் 8 பேர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 200 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கடும் நடவடிக்கை
மக்களுக்கான நிதி ஊழல் என்ற பெயரில் திருடப்படுகிறது. ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் பதவி பறிக்கப்படும், சொத்துக்கள் முடக்கப்படும். ஊழல் குற்றங்களால் சவுதியின் வளர்ச்சி பாதிக்கப்படக் கூடாது என்று சவுதி அமைச்சரவை வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.