ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதல்: இரண்டு இந்தியர்கள் உள்பட 25 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தலிபான்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்ததாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் அருகே தேவாலயத்தில் நேபாள பாதுகாவலர்கள் சென்ற மினி பேருந்து மீது தலிபான்கள் இன்று காலை தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 14 நேபாளிகள் உட்பட 25 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் காபூலில் இன்று நடைபெற்ற தாக்குதலில் இரண்டு இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதால் உயிர் பலி அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விட்டரில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், 'காபூலில் நடந்த கொடூர சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம். தாக்குதலில் உயிரிழந்த நோபாள மற்றும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அரசுகளுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். நேபாள அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியா உதவியாக இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு இந்தியர்களும் கொல்லப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டேராடூனைச் சேர்ந்த கணேஷ் தாபா மற்றும் கோவிந் சிங் ஆகியோர் இந்த தாக்குதலில் பலியானதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. இறுதி சடங்கிற்காக இறந்தவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆப்கான் அரசுடன் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.