"குவா குவா" சத்தம்.. கேட்க வைக்கும் பெற்றோருக்கு ரூ. 3,58,000 பரிசு... போர்ச்சுகலில் அதிரடி!
அல்கோடிம்: போர்த்துக்கீசிய கிராமம் ஒன்றில் குழந்தை பெற்றுக் கொள்ளும் தம்பதியருக்கு 3 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
போர்ச்சுக்கல் நாடு சர்வதேச பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. இதனால் அங்கு வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. எனவே, இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ளவே அஞ்சும் சூழல் நிலவுகிறது. இதனால், அங்கு குறைவான பிறப்பு விகிதமேக் காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக போர்ச்சுக்கலில் உள்ள அல்கோடிம் என்ற கிராமத்தில் கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் இறந்து விட்டனர். இதனால், 0.9 என்ற மிகவும் குறைவான அளவிலேயே அங்கு பிறப்பு விகிதம் உள்ளது. இது தற்போது தேசிய அளவில் அங்கு பிரச்சினையாகியுள்ளது.
எனவே, அந்தக் கிராமத்தில் உள்ள தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், 5 ஆயிரம் யூரோ பரிசு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ. 3 லட்சத்து 58 ஆயிரம் ஆகும்.
போர்ச்சுகல் அரசின் இந்த அறிவிப்பால் பல தம்பதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிகாரிகளோ, அரசின் இந்த அறிவிப்பால் பிறப்பு விகிதம் நிச்சயம் கூடி விடும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர்.
காது கொடுத்துக் கேட்டேன்.. ஆஹா.. குவா குவா சத்தம்.. என்ற பாட்டை அங்கு சீக்கிரமே கேட்கலாம் என்று நம்புவோம்.