சிங்கப்பூர் தாத்தா, பாட்டிகளைக் கவனித்துக் கொள்ள "ரோபோகோச்"... விரைவில் அறிமுகம்!
சிங்கப்பூர்: ஜப்பானில்தான் உலகிலேயே வயதானோர் அதிகம் உள்ளனர். எனவேதான் அந்த நாட்டில் மூத்த குடிமக்களுக்கு ராஜ மரியாதை அளித்து சிறப்பாக கவனிக்கிறார்கள்.
இந்த நிலையில் சிங்கப்பூரிலும் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவர்களுக்காக சில சிறப்பு நடவடிக்கைகளை அந்த நாட்டில் எடுக்க ஆரம்பித்துள்ளனர்.
அவர்களது ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வதற்காக விசேஷமாக வடிவமைக்கப்பட்ட ரோபோட்டுகள் களத்தில் இறக்க விடப்பட்டுள்ளன. இந்த ரோபோட்டுகளுக்கு வயதானவர்களை எப்படிப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாம்.
ரோபோகோச்
ரோபோகோச் என்று இந்த ரோபோட்டுகளுக்கு பெயரிட்டுள்ளனர். சைபார்க் என்ற நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த ரோபோட்டுகளை 20 மூத்த குடிமக்கள் மையத்தில் நிறுவி முதியோர்களுக்கு உதவி செய்ய களம் இறக்கவுள்ளனராம்.
எக்சர்ஸைஸ் செய்ய உதவும்
இந்த ரோபோட்டுகள், உடற்பயிற்சி செய்ய உதவுவது, சின்னச் சின்ன உதவிகளைச் செய்வது என முதியோர்களுக்கு உதவியாக இருக்குமாம். என்ஜீ பாலிடெக்னிக்கின் மாணவர்கள்தான் இதை உருவாக்கியுள்ளனர். சிங்கப்பூர் அரசின் இன்போகாம் வளர்ச்சி ஆணையம் இதற்கு நிதியுதவி செய்துள்ளது. அரசின் ஸ்மார்ட் நேஷன் திட்டத்தின் கீழ் இந்த ரோபோகோச்சை உருவாக்கியுள்ளனர்.
ஸ்மார்ட் நேஷன்
சிங்கப்பூர் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த இணைய தொழில்நுட்பங்களை முழுமையாக பயன்படுத்தும் வகையில் இந்த ஸ்மார்ட் நேஷன் திட்டத்தை சிங்கப்பூர் அரசு பல கோடி செலவில் செயல்படுத்தி வருகிறது.
ஜப்பான், ஆஸ்திரேலியா வரிசையில்
ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவும் மூத்த குடிமக்களை கையாளும் பிரச்சினையை இப்போது சிங்கப்பூரும் சந்தித்து வருவதால் இன்த ரோபோகோச்சை அவர்கள் தீவிர ஆய்வுக்குப் பின்னர் உருவாக்கியுள்ளனர்.
2 திரை..
இந்த ரோபோகோச்சில் இரண்டு திரை இருக்கும். ஒரு டேப்ளட் அதன் தலைப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். நமது முக பாவனைகள் மூலம் நமது உணர்வுகளை அறிந்து கொண்டு இது செயல்படும். பெரிய திரைப்பகுதியான ரோபோட்டின் மார்புப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும். இங்குதான் நமக்குத் தேவையான கட்டளைகளை பார்க்கலாம்.
கண்காணிக்கும்
நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்தத் திரை மூலமாக ரோபோகோச் நமக்குச் சொல்லும். இந்த ரோபோட்டுகளில் சக்தி வாய்ந்த சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நமது உணர்வுகளையும், நமது பேச்சையும் புரிந்து கொண்டு அதற்கேற்ப இது செயல்படும். மேலும் நாம் சரியாக உடற்பயிற்சி செய்கிறோமா என்பதையும் இது துல்லியமாக கண்காணித்து சரி செய்யும்.
9 லட்சம் மூத்தோர்கள்
சிங்கப்பூரில் 2030ம் ஆண்டு வாக்கில் கிட்டத்தட்ட அந்த நாட்டின் மக்கள் தொகை 60.9 லட்சமாக உயரும் என்றும், அதில் 9 லட்சம் பேர் மூத்த குடிமக்களாக இ்ருப்பார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜப்பானில் ரோபோகோச் போல ரோபோபியர் செயல்பாட்டில் உள்ளது என்பது நினைவிருக்கலாம்.