பசிபிக் கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ஆஸ்திரேலியா அருகே மினி சுனாமி
சிட்னி: பசிபிக் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, ஆஸ்திரேலியா அருகேயுள்ள தீவுக்கூட்டங்களை சுனாமி தாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள நியூ கலிடோனியா தீவில் டடைன் பகுதியில் இன்று காலை சுமார் 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் சில நிமிடங்கள் நீடித்தது. டடைன் பகுதிக்கு 300 கிமீ தொலைவில் சுமார் 82 கிமீ ஆழத்தில் மையம் கொண்டுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கம் என்பதால் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.
|
சிறு சுனாமி
நிலநடுக்கம் ஏற்பட்ட சுமார் 4 மணி நேரத்தில் நியூ கலிடோனியா மற்றும் வனூட்டி கடலில் சுனாமி அலை தாக்கியது. இருப்பினும் இது பெரிய அளவிலான சுனாமி அலையாக உருவாகவில்லை. வழக்கத்தைவிட 1 மீட்டர் அளவுக்கு உயரமாக கடல் அலை எழுந்ததாக தெரியவந்துள்ளது.
தீவுக்கூட்டங்கள்
நியூ கலிடோனியா மற்றும் அதன் அருகே உள்ள வானுயாடு உள்ளிட்டவை தீவு கூட்டங்களாகும். இந்த தீவுகளை சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கின. இதனால் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், தீவிர சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கும் எச்சரிக்கை
மேலும், ஆஸ்திரேலியாவின் கடற்கரையை ஒட்டிய 300 கி.மீபகுதிகளை சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக அந்த எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆஸி., நியூசிலாந்தில் கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகிறார்கள்.
இந்தியா தப்பியது
ஆஸி. அருகே ஏற்பட்ட சுனாமி காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. அதேநேரம், இந்த சுனாமி தாக்கம் இந்தியாவில் இருக்காது என்றே முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.