எங்கப்பா விமானத்தை கடலுக்குள் விடவில்லை: விமானியின் மகன் பேட்டி
கோலாலம்பூர்: எனது தந்தை விமானத்தை வேண்டும் என்றே கடலுக்குள் விடவில்லை என்று மலேசிய விமான கேப்டன் ஜஹரி அகமது ஷாவின் இளைய மகன் அமது சேத் தெரிவித்துள்ளார்.
கடந்த 8ம் தேதி மாயமான மலேசிய விமானத்தை அதன் கேப்டன் ஜஹரி அகமது ஷா வேண்டும் என்றே வேறு பாதையில் எடுத்துச் சென்று கடலுக்குள் விட்டுவிட்டார் என்று கூறப்படுகிறது. அவருக்கு உள்ள தனிப்பட்ட பிரச்சனைகளால் தற்கொலை செய்ய விமானத்தை கடலுக்குள் விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இது குறித்து கேப்டன் ஷாவின் இளைய மகன் அகமது சேத்(26) செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் ஆன்லைனில் அனைத்தையும் படித்தேன். ஆனால் நான் அனைத்து கணிப்புகளையும் புறக்கணித்துவிட்டேன். எனக்கு என் தந்தையை நன்றாக தெரியும். அவர் அதிகம் பயணம் செய்வதால் எங்களுக்குள் நெருக்கம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரை நான் புரிந்து வைத்துள்ளேன். அவர் வேண்டும் என்றே விமானத்தை கடலுக்குள் விட்டிருக்க மாட்டார் என்றார்.