தென்கொரியா படகு விபத்து வழக்கு: கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறை
சியோல்: தென்கொரியாவில் படகு கவிழ்ந்து 300 பேர் பலியான வழக்கில் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் படகின் தலைமைப் பொறியாளருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. க்வாங்ஜூ நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.
தென்கொரியாவில் சியோல் கடலோரப்பகுதியான இன்ஞ்சொன்சில் இருந்து ஜேஜூ தீவு நோக்கிப் பயணித்த படகு கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இப்படகில் 476 பேர் பயணித்தனர். அவர்களில் 300ற்கும் அதிகமானவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
172 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். இந்த படகில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் 339 பேரும் பயணித்தனர். இந்த படகு விபத்து தென்கொரியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
படகு கவிழ்ந்து குழந்தைகள் தண்ணீரில் தத்தளித்த போது படகோட்டி மற்றும் ஊழியர்கள் தப்பிச் சென்ற சம்பவம் தென்கொரியாவில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
தென்கொரிய படகு விபத்து தொடர்பாக அந்த படகு நிறுவனத்தின் உரிமையாளர் கிம் ஹன்-சிக் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் படகு விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கோருவதாக அவர் தெரிவித்திருந்தார்.
கொலை- கடல்சார்ந்த விதிகளை மீறியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த க்வாங்ஜூ நீதிமன்றம், சுற்றுலா படகின் கேப்டனுக்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. சுற்றுலாப் படகின் தலைமைப் பொறியாளருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், படகில் இருந்த ஊழியர்கள் 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கப்பல் கேப்டனுக்கும், தலைமை பொறியாளருக்கும் மரணதண்டனை வழங்கவேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.