இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலைதான்... ஆஸ்திரேலியா குற்றச்சாட்டு
ஆஸ்திரேலியா: இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின் போது அந்நாட்டு ராணுவம் போர் குற்றம் புரிந்துள்ளது என்று ஆஸ்திரேலிய மக்கள் நல ஆதரவு மையம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வர உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த மக்கள் நல ஆதரவு மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், ''இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரின்போது அந்நாட்டு ராணுவம், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளின்போது, விடுதலைப் புலிகளை அழிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்ட இலங்கை ராணுவம், அப்பாவி மக்களை சித்ரவதை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது போன்ற மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது.
இதுமட்டுமின்றி, இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பான ஆதாரங்களையும், இலங்கை ராணுவம் படிப்படியாக அழித்துள்ளது" என்று குற்றஞ்சாட்டியுள்ளது.