தொழில்நுட்ப புரட்சிக்கு இந்தியா தயாராகிவிட்டது: மோடியை பாராட்டி சுந்தர் பிச்சை மெசேஜ்
வாஷிங்டன்: அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று கூகுள் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி (சி.இ.ஓ.) சுந்தர் பிச்சை, வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், இந்தியா ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகிவிட்டதாக புகழாரம் சூட்டியுள்ளார்.
சுந்தர் பிச்சை உரையின் முக்கிய அம்சங்கள்: பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் நான் மட்டுமல்ல கூகுள் நிறுவனத்தின் அனைத்து தொழிலாளர்களும் பெருமிதம் கொள்கிறோம். அமெரிக்கா வாழ் இந்திய சமூகத்தினர் அனைவரும் மோடி வருகையால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுவரை, அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு இந்தியா, தனது நாட்டின் திறமைசாலிகளை ஏற்றுமதி செய்துவந்துள்ளது. இந்தியர்களும் உலகம் முழுவதும் தொழில்நுட்ப துறையில் பல்வேறு புரட்சிகளை செய்திருக்கின்றனர்.
ஆனால், தற்போது இந்தியா ஒரு தொழில்நுட்ப புரட்சிக்கு தயாராகிவிட்டது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பலனளிக்கும். இணையதளத்தை பயன்படுத்தும் (முதல் தலைமுறையினர்) அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கிராமங்களில் இணையதளம் வேகமாக பரவும் வாய்ப்பு அமைந்துள்ளது.
இதன்மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் முதலீட்டாளர்கள் பயன் பெறுவார்கள். இந்த புரட்சியின் தொடக்க புள்ளி பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைதான்.
இந்தியாவில் உள்ள 1.2 பில்லியன் மக்களை இணைப்பதே பிரதமரின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் நோக்கம். குறைந்த பேண்ட்வித்தில் இணைய சேவையை நிறைய பேருக்கு அளிக்க வேண்டும் என்பதே கூகுள் நிறுவனத்தின் எதிர்கால திட்டமாக உள்ளது.
நீங்கள் (மோடி) கூகுள் தலைமையகம் வரும்போது எங்களது சேப் மையங்களை பார்வையிட்டு உங்களது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். உங்களது வருகை எங்களுக்கும், இந்தியர்கள் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு சுந்தர் பிச்சை பேசியுள்ளார்.