Jananayagan: ஜனநாயகன் இணையத்தில் லீக்! முன்ஜாமீன் மனுவில் எடிட்டர் சொன்ன முக்கிய பாயிண்ட்!
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் லீக்கான விவகாரத்தில் ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர் முன்ஜாமீன் மனு கோரிய வழக்கில் அவர் சில முக்கிய விஷயங்கள தெரிவித்துள்ளார். அவை என்னவென்று பார்ப்போம்.
விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில் தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது. இந்த படம் விஜய்யின் கடைசி படம் என்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் இந்த படம் தணிக்கை வாரியத்தின் மறுாய்வு குழுவின் பரிசீலனையில் இருந்த போதே கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது. இது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் அளித்த புகாரின் பேரில் அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த வழக்கு தொடர்பாக 3 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயகன் படத்தை எடிட்டிங் செய்த ஸ்டூடியோவில் மற்றொரு படத்திற்கு உதவி எடிட்டராக பணிபுரிந்த நபர் படத்தை இணையத்தில் வெளியிட்டதாக சைபர் கிரைம் குற்றம்சாட்டியுள்ளது.
இந்த நிலையில் திருவேற்காட்டை சேர்ந்த ஃப்ரீலான்ஸ் எடிட்டர் உமா சங்கர் சென்னை ஹைகோர்ட்டில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: "எனக்கும் திரைத்துறைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சமீபத்தில் இதய அறுவை சிகிச்சை செய்துள்ளேன்.
ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதில் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை. உண்மைக் குற்றவாளிகளைப் பாதுகாக்க போலீஸார் என்னை வழக்கில் சேர்த்துள்ளார். இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்பு விசாரணைக்கு வந்தது. தயாரிப்பாளர் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
"மனுதாரர்தான் இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளி. அவர்தான் சட்டவிரோதமாகப் படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக இடையீட்டு மனுத்தாக்கல் செய்ய அவகாசம் தேவை. படம் இணையத்தில் லீக்கானதற்கு அடுத்த நாளே இதய பிரச்சனை என கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என வாதிட்டார்.
போலீஸ் தரப்பில் வழக்கில் கைதானவர்களின் வாக்குமூலத்தை அடிப்படையாக கொண்டு மனுதாரர் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி இந்த வழக்கின் விசாரணை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications