2 நாள் அரசுமுறைப் பயணம்... வங்கதேச பிரதமரைச் சந்தித்தார் சுஷ்மா சுவராஜ் !
டாக்கா: இரண்டு நாள் அரசு முறை பயணமாக வங்க தேசம் சென்றுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இன்று அந்நாட்டு பிரதமரைச் சந்தித்தார்.
கடந்த மே மாதம் 26-ம் தேதி மத்திய அமைச்சராக பதவியேற்றார் சுஷ்மா சுவராஜ். இதையடுத்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பிய வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலி, தங்கள் நாட்டிற்கு வருகை தரும்படி அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட சுஷ்மா சுவராஜ் நேற்று வங்கதேசம் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக தனது வங்கதேச பயணம் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியுடன் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார் சுஷ்மா. இந்த ஆலோசனையின் போது தீஸ்தா நதிநீர் விவகாரம், எல்லை விவகாரங்கள் குறித்து அவர்கள் பேசியதாகத் தெரிகிறது.
அதேபோல், வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் குடியேறுவோர் குறித்து அஸ்ஸாம் மாநில அரசுடனும் சுஷ்மா ஸ்வராஜ் ஆலோசனை நடத்தி உள்ளார். மேலும் வங்கதேசத்தில் இருந்து மேகலாயாவின் ஷில்லாங் வழியே அஸ்ஸாமுக்கு பேருந்து போக்குவரத்தை இயக்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தனது இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக வங்கதேசம் புறப்பட்டுச் சென்றுள்ளார் சுஷ்மா சுவராஜ். அவரை அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முகம்மது அலை விமான நிலையத்தில் வரவேற்றார்.
அதனைத் தொடர்ந்து, இன்று அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவை சந்தித்தார் சுஷ்மா. அப்போது இரு நாட்டு உறவுகள் பற்றி இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.
இந்தப் பயணத்தின் போது இருதரப்பு உறவுகள் மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் சுஷ்மா பேச்சு வார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
சுஷ்மா சுவராஜ் வெளியுறவுத் துறை அமைச்சராக பதவியேற்ற பின் தனியாக வெளிநாடு செல்வது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்னர், பிரதமர் நரேந்திர மோடியின் பூடான் சுற்றுப்பயணத்தின் போது சுஷ்மா சுவராஜ் உடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications