ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது சிரியா திடீர் போர் விமான தாக்குதல்!
பாக்தாத்: ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவுப் படையான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது சிரியா திடீரென வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. இத்தாக்குதலில் 57 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஈராக்கில் சதாம் உசேன் ஆதரவுப் படையான சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் கை ஓங்கி இருக்கிறது. சிரியா- ஈராக்கில் தாங்கள் கைப்பற்றிய பகுதிகளைக் கொண்டு இஸ்லாமிய தேசம் அமைப்பதுதான் இவர்களது இலக்கு.
ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் உக்கிர தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் ஈராக் தடுமாறிக் கொண்டிருக்கிறது. மேலும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்துங்கள் என்று அமெரிக்காவிடம் ஈராக் கெஞ்சிக் கொண்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்காவோ, ஈராக்கில் பிரதமர் மாலிக் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு சன்னி, ஷியா முஸ்லிம்கள் மற்றும் குர்து இன மக்கள் பங்கேற்கும் தேசிய அரசு அமைக்க முயற்சித்து வருகிறது.
இந்த நிலையில் ஈராக்கின் அன்பார் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் முகாம் மீது சிரியா விமானங்கள் திடீரென தாக்குதல் நடத்தின. ஆனால் இந்த தாக்குதலில் 57 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். 120 பேர் காயம் அடைந்தனர்.
ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தினாலும் தங்கள் நாட்டு எல்லைக்குள் புகுந்து தாக்கியதால் சிரியாவுக்கு ஈராக் கண்டனம் தெரிவித்துள்ளது.