துபாயில் அல்ஜீமர்ஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த நடந்த டேபிள் டென்னிஸ் போட்டி
துபாய்: துபாயில் மறதி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது.
துபாயில் அல்ஜீமர்ஸ் எனப்படும் மறதி நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த டேபிள் டென்னிஸ் போட்டி நடத்தப்பட்டது. நல்ல காரியத்திற்காக நடந்த இந்த போட்டி துபாயில் உள்ள ஃபெஸ்டிவல் சிட்டி மாலில் நடைபெற்றது.
டேபிள் டென்னிஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டு விளையாடினர்.
இடமாற்றம்:
துபாய் இந்திய துணைத் தூதரகத்தில் வர்த்தகம், கல்வி, ஊடகத்துறை மற்றும் தகவல் உள்ளிட்ட துறைகளுக்கான அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த டாக்டர் திஜு தாமஸ். இவர் தனது மூன்று ஆண்டு பணிக்காலம் நிறைவடைந்து டெல்லி செல்கிறார்.
இதனையடுத்து தனது பதவிக்காலத்தின் போது சிறப்பான முறையில் ஒத்துழைப்பினை வழங்கிய ஊடகத்துறையினரை சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இது போல் புதிதாக பொறுப்பேற்கும் அதிகாரிக்கும் ஒத்துழைப்பினை அளிக்கவும் கேட்டுக் கொண்டார். பின்னர் ஊடகத்துறையினருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் குறித்த பிரத்யேக இணையதளத்தை ஏற்படுத்தி இவர் செயல்படுத்தி வருகிறார். இந்தப் பணிக்கு ஈமான் கலாச்சார மையம், கேரளா முஸ்லீம் கலாச்சார மையம், சேவனம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ரத்ததானம் செய்ய விரும்புபவர்கள் குறித்த தகவலை வழங்கி உதவியதற்காக பாராட்டு தெரிவித்தார். புதிய பொறுப்புகளில் இன்னும் சிறப்பான முறையில் பணியாற்ற அவரை ஊடகத்துறையினர் வாழ்த்தினர்.