ஆப்கனில் நாளை புதிய அரசை அமைக்கும் தாலிபான்கள்.. 'அந்த' 10 பில்லியன் டாலர் தான் முதல் இலக்கு
காபூல்: தலைநகர் காபூலை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில், சுமார் 2 வாரங்கள் கழித்து, நாளை தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி ஆப்கனில் அமையவுள்ளது.
Recommended Video
ஆப்கனில் அமெரிக்கப் படைகள் இருந்த வரை தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது. ஆனால், என்று அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதோ அன்றே தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கிவிட்டனர்.
பல பகுதிகளில் ஆப்கன் ராணுவம் தாலிபான்களுக்கு எதிராகப் போராடவில்லை. இதனால் ஒட்டுமொத்த ஆப்கனையும் வெறும் சில வாரங்களில் தாலிபான்களால் கைப்பற்ற முடிந்தது.

தாலிபான்கள்
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றினர். அதேநேரம் காபூல் விமான நிலையம் மட்டும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. ஆகஸ்ட் 31ஆம் தேதி ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறியது. அதேபோல காபூல் விமான நிலையமும் தாலிபான்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதை வெற்றி பெருவிழாவாகவே தாலிபான்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

நாளை புதிய அரசு
அடுத்தகட்டமாக ஆப்கனில் ஆட்சி அமைக்கும் பணிகளில் தாலிபான்கள் ஈடுபடத் தொடங்கினர். தலைநகர் காபூலை கைப்பற்றி சுமார் 2 வாரங்கள் ஆகும் நிலையில், நாளை ஆப்கனில் புதிய அரசைத் தாலிபான்கள் அமைக்கவுள்ளனர். வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்குப் பிறகு புதிய அரசு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் வரும் காலங்கள் தாலிபான் தலைமையிலான புதிய அரசுக்கு வரிசை கட்டி பல்வேறு சிக்கல்கள் காத்திருக்கின்றன. அதையெல்லாம் சமாளித்து பொதுமக்களையும் தாலிபான்கள் எப்படி அரவணைத்துச் செல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆப்கனில் எதிர்காலம் அமையும்.

பல சிக்கல்கள்
கடந்த 20 ஆண்டுகளாகப் போர் தொடர்ந்து நடைபெற்று வந்த ஆப்கன், பெரும்பாலும் வெளிநாட்டின் நிதியுதவிகளையே நம்பி இருந்து வருகிறது. இப்போது அஸ்ரப் கானி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டிற்குச் செல்லும் நிதியை பல்வேறு நாடுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. வரும் காலங்களில் தாலிபான்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளன.

விலைவாசி உயர்வு
ஆப்கனில் மிக முக்கிய பிரச்சினையாக இருப்பது பண வீக்கமும் விலைவாசி உயர்வும் தான். பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களின் நிலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டு ஆப்கன் ஜிடிபி 9.7% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல அடுத்த ஆண்டும் 5.2% வரை ஆப்கன் ஜிடிபி குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வரும் காலங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்போது பல லட்சம் குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

10 பில்லியன் டாலர்
ஆப்கன் அரசுக்கு வெளிநாடுகளில் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகள் உள்ளது. அது தாலிபான்களுக்குக் கிடைத்தால் நிலைமையைச் சற்று கட்டுப்படுத்தலாம். ஆனால் அதுவும் எளிதாகத் தாலிபான்களின் கைகளுக்குக் கிடைக்காது. இதனால் நாளை பதவியேற்கும் தாலிபான்கள் தலைமையிலான புதிய ஆப்கன் அரசு நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.

தாலிபான்கள் ஆட்சி 1.o
கடந்த 1996- 2001 வரையில் ஆப்கனில் தாலிபான்கள் தலைமையிலான ஆட்சியே இருந்தது. அப்போது ஆப்கனில் பல பயங்கரவாத குழுக்கள் இயங்க தொடங்கின. அப்படி அங்கு இயங்கிய அல்கொய்தா பயங்கரவாதிகள் அமெரிக்காவில் 2001இல் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினர். அதன் பின்னரே, அப்கனில் இருக்கும் பயங்கரவாதிகளை ஒழிக்க அமெரிக்கா போர் தொடுத்தது. தாலிபான்கள் தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு, புதிய அரசு அமைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications