20 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர்.. முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவிப்பு
காபூல்: ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதால் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
Recommended Video
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் நேற்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அதிபராக இருந்த அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
விரைவில் ஆட்சி மாற்றமும் ஏற்பட போகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பூமியில் ரத்தக்களறி நடக்கக் கூடாது என்பதற்காகவே நாட்டை விட்டு வெளியேறியதாக அஷ்ரப் தெரிவித்திருந்தார். இதையடுத்து காபூல் விமான நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு போர்
இந்த நிலையில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்ததாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து தலிபான்களின் அரசியல் பிரிவு செய்தித் தொடர்பாளர் முகமது நயீம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், காபூலை கைப்பற்றிய தினம் ஆப்கான் மக்களுக்கும் முஜாஹிதீனுக்கும் சிறந்த நாள் ஆகும்.

தியாகம் முயற்சி
20 ஆண்டுகளாக அவர்கள் செய்த தியாகத்திற்கும் முயற்சிகளுக்கும் இன்று கை மேல் பலனை காண்கிறார்கள். நாட்டில் போர் முடிவுக்கு வந்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்கிறோம். எங்கள் நாட்டுக்கு எது சுதந்திரமோ அதை ஏற்படுத்தி தர வேண்டும் என்பதை நாங்கள் அடைந்துவிட்டோம்.

மண்ணை பயன்படுத்த மாட்டோம்
யாரையும் குறி வைக்க எங்கள் மண்ணை நாங்கள் எப்போதும் பயன்படுத்த மாட்டோம். அது போல் யாரையும் துன்புறுத்தவும் மாட்டோம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர் கூறுகையில், அனைத்து தூதரக அதிகாரிகளும் தூதர் ராஸ் வில்சன் உள்ளிட்டோரும் காபூல் விமான நிலையத்தில் உள்ளனர். அவர்கள் வெளியேற விமானத்திற்காக காத்துக் கிடக்கிறார்கள். தூதரகத்தில் அமெரிக்க கொடி இறக்கப்பட்டுவிட்டது என்றார்.

ஆப்கானியர்கள் கூட்டம்
விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் ரன்வேயில் கூட்டம் கூட்டமாக காத்துக் கிடக்கிறார்கள், குழந்தைகளை வைத்துக் கொண்டு பெரிய லக்கேஜுகளுடன் அங்கும் இங்கும் கவலை தோய்ந்த முகத்துடனும் பதற்றத்துடனும் காணப்படுகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜப்பான் உள்பட 60 க்கும் மேற்பட்ட நாடுகள் ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டை விட்டு வெளியேற விரும்பும் ஆப்கானியர்கள் மற்றும் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications