போப் ஆண்டவரைக் கொல்லத் திட்டம் - 15 வயது சிறுவன் அமெரிக்காவில் கைது
வாஷிங்டன்: அமெரிக்கா வர இருக்கின்ற போப் ஆண்டவரைக் கொல்லை திட்டமிட்ட சிறுவன் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
போப் ஆண்டவர் பிரான்சிஸ் வருகிற 22 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது பிலடெல்பியாவில் திறந்தவெளி மைதானத்தில் பக்தர்கள் மத்தியில் உரைநிகழ்த்துகிறார். மேலும் வாஷிங்டன், நியூயார்க் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இந்த நிலையில் 15 வயது சிறுவன் ஒருவன் போப் ஆண்டவரை கொல்வதற்கு சதி திட்டம் தீட்டியது கண்டுபிடிக்கப்பட்டது. இணையதளத்தை அதிகமாக பயன்படுத்தும் இந்த சிறுவன் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஈர்க்கப்பட்டுள்ளான்.
இதனால் போப் ஆண்டவரை கொல்வதற்கு அவன் திட்டமிட்டுள்ளான். இதற்காக எந்தவித ஆயுதங்களை பயன்படுத்துவது, எப்படி கொல்வது போன்ற விவரங்கள் அனைத்தையும் இணையதளம் மூலம் அவன் பெற்றிருக்கிறான்.
அமெரிக்க புலனாய்வு துறையினர் இணையதள நடவடிக்கைகளை ஆய்வு செய்தபோது இந்த சிறுவனின் செயல் தெரியவந்தது. அவனை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனால் அவன் பற்றிய எந்த விவரத்தையும் அவர்கள் வெளியிடவில்லை.