அழிவின் விளிம்பில்... சிஞ்சார் மலைக்குன்றுகளில் கொத்து கொத்தாக செத்து மடியும் "யாஸிதிகள்"
மொசூல்: ஷியா முஸ்லிம்களிடம் இருந்து அதிகாரத்தை கைப்பற்ற யுத்தம் நடத்தும் சன்னி முஸ்லிம்கள் இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். என்கிற இஸ்லாமிய தேசத்தினரின் 'நிலவேட்டையில்' பல்லாயிரக்கணக்கான அப்பாவி யாஸிதிகள் 'நரவேட்டை'யாடப்பட்ட பெருந்துயரை சுமந்து நிற்கிறது ஈராக்...
சிரியா, ஈராக்க்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் பெருமளவு நகரங்களைக் கைப்பற்றி 'இஸ்லாமிய தேசம்' எனப் பெயரிட்டுள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் பெயரும் கூட' இஸ்லாமிய தேசம்' என மாற்றப்பட்டுவிட்டது.
நிற்காத நாடுபிடி வேட்டை
இஸ்லாமிய தேசம் என்று பிரகடனப்படுத்தப்பட்ட பின்னரும் கூட ஐ.எஸ்.ஐ.எஸ்.-ன் 'நாடுபிடி' வேட்டை நின்றபாடில்லை. யாஸிதிகள் என்ற இனத்தவர்வாழும் சிஞ்சார் நகரைக் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ஐ.எஸ்.ஐ.எஸ். தேசம்.
பெருந்துயரில் யாஸிதிகள்
இதன் பின்னர்தான் யாஸிதிகள் பெருந்துயரை எதிர்கொள்ள நேரிட்டனர்.. இஸ்லாமிய தேசத்தின் கீழ் தங்களது நகரங்கள் வந்த உடன் அகதிகளாக சிஞ்சார் மலைக்குன்றுகளை நோக்கி அகதிகளாகி ஓடினர் யாஸிதிகள்.
சிஞ்சார் சோகம்
ஆனால் சிஞ்சார் மலைக்குன்று பாலைவனம்.. வெப்ப புயல் வீசும் கொடும் வெயில்.. உண்ண உணவு கிடைக்காமல் வெயிலை தாங்க முடியாமல் பசிக் கொடுமையால் மலை முகடுகளில் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர் யாஸிதிகள்..
பிஞ்சு குழந்தைகள்
அப்படியே செத்து மடிந்த உடல்களை கைவிட்டு விட்டு ஓடிக் கொண்டே இருக்கின்றனர் யாஸிதிகள்... இந்த உடல்களை நாய்கள்தான் குதறிக் கொண்டிருக்கின்றன...இவர்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் பிஞ்சு குழந்தைகள்... சிஞ்சார் மலைக் குகைகள் இப்போது மனித உடல்களால் நிறைந்து போய்கிடக்கிறது.
சிரியாவுக்குள் அடைக்கலம்
சுமார் 50 ஆயிரம் யாஸிதிகள் பட்டினியால் வாடுகின்றனர்.. சிஞ்சார் மலைக் குன்றுகளைத் தாண்டி சிரியாவுக்குள் சில நூறு யாஸிதிகள் அடைக்கலாமாகிக் கொண்டிருக்கின்றனர். சில வெளிநாடுகள் கரிசனப் பார்வையுடன் உணவும், குடிநீரையும் ஹெலிகாப்டர்கள் மூலம் யாஸிதிகளுக்கு வழங்கி வருகின்றன.
இதுதான்
ஈராக் ராணுவம் மனிதாபிமான பணிகளை மேற்கொண்டாலும் வெளிநாட்டு உதவிகளும் கூட யாஸிதிகளின் தாகத்தை தீர்க்கவில்லை..சிஞ்சா மலைக்குன்று நிலவரத்தைப் பார்வையிட்ட அமெரிக்கா ஊடகவியலாளர் ஜோனாதன் க்ரோன் இப்படி பதிவு செய்கிறார்..
"நாங்கள் ஒரு 200 பேர் கொண்ட குழுவாக வெளியேறினோம். 20 பேர் உயிரிழந்துவிட்டனர். அனேகமாக 2 நாட்கள்தான் எங்கள் உயிரும் கூட தாங்கலாம்" என்கிறார் சையதோ ஹாஜி என்ற அகதி. இப்படித்தான் துயரம் தோய்ந்த வரலாற்றை தாங்கி நிற்கிறது ஈராக்கின் சிஞ்சார் குன்றுகள்.