ராணுவம் கைப்பற்றிய தாய்லாந்தில் தற்காலிக பிரதமரானார் தளபதி சான் ஓ சா
பாங்காக்: தாய்லாந்தின் தற்காலிக பிரதமராக பதவியேற்பதாக ராணுவத் தளபதி சான் ஓ சா அறிவித்துள்ளார்.
தாய்லாந்து நாட்டில் தக்ஷின் ஷினவத்ரா, ராணுவ புரட்சி மூலம் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, இடைக்கால அரசுக்கு அவரது சகோதரி யிங் லக் ஷினவத்ரா (வயது 46) தலைமை தாங்கி நடத்தி வந்தார். ஆனால், அவர் மீது பதவியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இதில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் அவரது பதவியை பறித்து, கடந்த 7ந் தேதி கோர்ட்டு உத்தரவிட்டது.
இதற்கிடையே தாய்லாந்தில் அரசுக்கு எதிராக கடந்த 7 மாதங்களாக தொடர் போராட்டம் நடந்து வந்தது. எனவே, அங்கு இயல்பு நிலையை கொண்டு வர ராணுவ ஆட்சி அமல் படுத்தப்பட்டது. இதனை ராணுவ தலைமை தளபதி ஜெனரல் பிரயுத் சான் ஓ சா அறிவித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு ராணுவம் சட்டம் அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இந்நிலையில், புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப் படும் வரை தானே தாய்லாந்தின் பிரதமராக இருக்கப் போவதாக அறிவித்துள்ளார் பிரயுத் சான் ஓ சா. இத்தகவலை அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன.