தாய்லாந்து பிரதமர் பதவி விலக வேண்டும்: கோர்ட் அதிரடி உத்தரவு!
பாங்காங்: தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக பதவி விலக வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
தாய்லாந்தில் பிரதமராக பதவி வகித்த தக்ஷின் ஷினவத்ரா, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி அவருக்கு எதிராக 2006ஆம் ஆண்டு நடைபெற்ற ராணுவப் புரட்சி ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார். அவரது சகோதரியான யிங்லக் ஷினவத்ரா, பிரதமர் பதவியை ஏற்றார். தக்ஷின் ஷினவத்ராவின் நிழல் பிரதமர் என இவரை எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர்.
இந்நிலையில் யிங்லக் ஷினவத்ரா, பதவி விலகக் கோரி எதிர்க்கட்சியினர் கடந்த ஆண்டு பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். அத்துடன் தாய்லாந்தில் தமக்கு ஆதாயம் ஏற்படும் வகையில் யிங்லக் ஷினவத்ரா, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி 2011ஆம் ஆண்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் தலைவரை இடம் மாற்றம் செய்ததாகவும் வழக்கு தொடர்ப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் நேற்று ஷினவத்ரா ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இவ்வழக்கில் அளிக்கப்பட்ட இன்றைய தீர்ப்பில், தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா மற்றும் அவரது அமைச்சரவை சகாக்கள் பலரும் பதவி விலக அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.