இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்காவின் தாக்குதலுக்கு இலக்காகும் 7வது நாடு சிரியா
வாஷிங்டன்: அமெரிக்க இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டு மக்கள் பலர் கொலை செய்யப்பட்ட பிறகு அந்த நாட்டின் ராணுவ தாக்குதலுக்கு உள்ளாகும் ஏழாவது நாடு சிரியாவாகும்.
2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம்தேதி அமெரிக்காவில் அல்கொய்தா தீவிரவாதிகளால் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்டது. அதன்பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை அமெரிக்க துரிதப்படுத்தியது.
இதன் ஒருபகுதியாக அல்கொய்தா தலைவன் ஒசாமா பின்லேடனை கொன்று பழி தீர்த்தது அமெரிக்கா. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு தீவிரவாதம் எங்கெல்லாம் அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா தலையிட்டு விமானப்படை மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
சிரியாவில் இன்று முதன்முறையாக தனது விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. இரட்டை கோபுர தகர்ப்புக்கு பிறகு அமெரிக்காவின் ராணுவ தாக்குதலுக்கு இலக்காகும் 7வது நாடு சிரியாவாகும்.
முன்னதாக ஈராக், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் விமானப்படை மூலமாகவும், சோமாலியா, ஏமன், பாகிஸ்தான், லிபியா ஆகிய நாடுகளில் ஆளில்லா ட்ரோன் விமானங்கள் மூலமாகவும் அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. அதிலும் ஈராக்கில் அடுத்தடுத்த நான்கு அதிபர்களால் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பதவியேற்ற அனைத்து அதிபர்களுமே, ஈராக்கில் தாக்குதல் நடத்தியபடியே உள்ளனர். அதில் நான்காவது அதிபர்தான் ஒபாமாவாகும்.