தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஆஸ்திரேலியா போட்ட கோடு.. ரோடு போடும் இந்தியா.. சர்வதேச அளவில் மாஸ்!
கேன்பெர்ரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தகம் மேற்கொள்வதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலிருந்து அதிக அளவு எஃகு உள்ளிட்ட பொருட்கள் அந்நாட்டுக்கு ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் இந்தியாவும் இந்த ஒப்பந்தம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டு வருகிறது. இவ்வாறு நிறைவேற்றப்பட்டால் இரு நாடுகளிடையே தடையற்ற வர்த்தகம் உருவாகும்.
இது இரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
தடையற்ற ஒப்பந்தம்
இந்த ஒப்பந்தம் நீண்ட நாட்களாக திட்டமிடப்பட்டு வந்திருந்த நிலையில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாட்டில் இது குறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் மற்றும் பிரதமர் மோடி என இருவரும் விரிவாக விவாதித்திருந்தனர். இதனையடுத்து தற்போது இந்த மசோதா தங்களது நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அல்பானீஸ் கூறியுள்ளார். இதேபோல பிரிட்டனுடனும் ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்திருக்கிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இனி வரும் காலங்களில் இரு நாட்டிலிருந்தும் ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100% வரி விலக்கு அளிக்கப்படும்.
இலக்கு
குறிப்பாக இந்தியாவை பொருத்த அளவில், எஃகு உற்பத்தி துறை இந்த ஒப்பந்தத்தால் நல்ல பலனடையும் என்று சொல்லப்படுகிறது. உலக அளவில் எஃகு ஏற்றுமதியில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. இங்கு ஆண்டுக்கு சுமார் 72.2 மில்லியன் டன் எஃகு உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் வெறும் 6.4 மில்லியன் டன் எஃகுதான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே அந்நாட்டில் எஃகு பொருட்களுக்கும், கச்சா எஃகுக்கும் நல்ல 'டிமான்ட்' இருக்கிறது. ஏற்கெனவே எஃகு உற்பத்தி துறையில் 2030ம் ஆண்டுக்குள் 300 மில்லியன் டன் என்கிற இலக்கை அடைய வேண்டும் என்று மத்திய அரசு கூறிவரும் நிலையில் இந்த தடையற்ற வர்த்தகம் இதற்கு சரியான வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
100% வரி விலக்கு
அதேபோல தோல் பொருட்கள், அறைகலன்கள், ஜவுளி, நகைகள், இயந்திரங்கள், ரயில் பெட்டிகள், விளையாட்டு பொருட்கள் என இந்திய தயாரிப்புக்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 'தடையற்ற வர்த்தக' மசோதா இந்தியாவிலும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இப்போது ஏற்றுமதியாகும் இந்த பொருட்களுக்கு 4-5% வரை சுங்க வரி விதிக்கப்படுகிறது. எனவே இந்தியா ஆஸ்திரேலியாவுடனான தடையற்ற ஒப்பந்த மசோதாவை நிறைவேற்றினால் இந்த பட்டியலில் உள்ள 96.4% பொருட்கள் 100% வரியின்றி அந்நாட்டில் இறக்குமதி செய்யப்படும்.
இந்தியா வருகை
ஆஸ்திரேலியாவிலிருந்து ஒயின், கனிம எரிபொருட்கள், எண்ணெய் உள்ளிட்டவை இந்தியா இறக்குமதி செய்கிறது. எனவே இருநாட்டுக்கும் இடையேயுள்ள வர்த்தக இடைவெளியை ஆஸ்திரேலியா குறைத்தது போல இந்தியாவும் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்த வரும் மார்ச் மாதம் பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவுடன் ஆஸ்திரேலியா பிரதமர் அல்பானீஸ் இந்தியா வருகை தர இருக்கிறார். இந்த வருகையின்போது இருநாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு மேலும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.