புடினுக்கு நெருக்கம்.. ரஷ்யாவில் எம்எல்ஏவாக இருக்கும் பீகார் நபர்! யார் இந்த அபய் குமார் சிங்?
மாஸ்கோ: இந்தியாவை சேர்ந்த ஒருவர் ரஷ்ய அதிபர் புடின் கட்சியில் எம்எல்ஏவாக உள்ளது விஷயம் வெளியாகி உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. அனைத்து தரப்பு மக்களும் இந்த விஷயம் குறித்து படிக்க துவங்கி உள்ளனர். டீக்கடைகளிலும் கூட சர்வதேச அரசியல் குறித்து பேச துவங்கி உள்ளனர்.
இந்த போர் விஷயத்தில் இந்தியா நடுநிலை வகிக்கிறது. இது ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடு தான் என அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. ஏனென்றால் அமெரிக்கா, ஐரோப்பி நாடுகளுடன் இணைந்து உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வருகிறது.

ரஷ்யாவில் இந்திய பிரதிநிதி
இந்நிலையில் தான் ரஷ்யாவின் மேற்குபகுதியில் உள்ள குர்ஸ்க் நகரில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட அபய்குமார் சிங், ‛டெபுடட்' பிரதிநிதியாக இருக்கிறார். இது இந்தியாவில் உள்ள எம்எல்ஏ பதவி போன்றது. இவர் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு இந்த பதவியை பெற்றுளாார். இவர் யார், அவருக்கும், ரஷ்யாவுக்கு இடையேயான தொடர்பு குறித்த முழுவிபரங்கள் வருமாறு:

பீகாரை சேர்ந்தவர்
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் அபய் குமார் சிங். பாட்னாவில் உள்ள லயோலா உயர்நிலை பள்ளியில் படித்தார். 1990 காலக்கட்டத்தில் மருத்துவம் படிக்க ரஷ்யா சென்றார். குர்ஸ்க் நகரில் தங்கி படிப்பை மேற்கொண்டார். மருத்துவ படிப்பை முடித்தவர் அங்கிருந்து பாட்னா வந்தார்.
அவர் எதிர்பார்த்தபடி வாழ்க்கை செல்லவில்லை. இதனால் அவர் மீண்டும் ரஷ்யாவின் குர்ஸ்க் நகருக்கு சென்றார்.

புடின் கட்சியில்..
அங்க மருந்து வணிகத்தை துவக்கினார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் கால்பதித்தார். இதன்மூலம் ரஷ்யாவின் குர்ஸ்க் நகரில் ஏராளமானவர்கள் அவருக்கு பழக்கமானார்கள். இதற்கிடையே அரசியல் ஆர்வம் அதிகரித்தது. 2015ல் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் ஐக்கிய ரஷ்ய கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு ‛டெபுடெட்' பிரதிநிதியாக பொறுப்பு வகித்து வருகிறார்.

இது போர் அல்ல
உக்ரைன் போர் தொடர்பாக அவர் இந்திய ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார். அதில், ‛‛ரஷ்யா போர் தொடுக்கவில்லை. தன்னை பாதுகாத்து கொள்ள முயல்கிறது. இந்தியாவில் நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்றது தான் இந்த நடவடிக்கை. இதை போர் என கூற வேண்டாம். இந்திய எல்லையில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் வாலாட்டினால் என்ன செய்வோமோ, அதை தான் நாங்களும் மேற்கொண்டு வருகிறோம். இதில் அணுஆயுதங்கள் பயன்படுத்தப்படாது'' என்றார்.

திறந்து வைத்த தூதர்
முன்னதாக 2012ல் ரஷ்யாவுக்கான அப்போதைய இந்திய தூதராக இருந்த அஜய் மல்ஹோத்ரா, குர்ஸ்க் நகரில் உள்ள அபய் சிங்குக்கு சொந்தமான வணிக வளாகத்தை திறந்து வைத்தார். இவர் இந்தியாவுடனான உறவையும் சிறப்பாக வைத்துள்ளார். 2015ல் சர்வதேச யோகா தினத்தன்று அபய்குமார் சிங் குர்ஸ்கில் யோகா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

குர்ஸ்க் சிறப்பு என்ன
ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் நகர் பழம்பெருமை வாய்ந்ததாகும். 1943ல் ஹிட்லரின் இராணுவம் இந்த நகரில் தோற்கடிக்கப்பட்டது. அத்தகைய சிறப்பு கொண்ட இந்த நகரம் தற்போது இந்தியாவுடனும் தனிச்சிறப்பை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications