50 நகரங்களில் தீயை மூட்டிய ஹிஜாப் போராட்டம்...31 பேர் பலி...பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா
தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் சரியாக அணியாததாக கூறி இளம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டதில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதனையடுத்து நாடுமுழுவதும் ஹிஜாபை எதிர்த்து போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. சுமார் 50 நகரங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது.
இச்சூழலில் ஹிஜாப் அணிவது மற்றும் இஸ்லாமிய மத நெறிகள் சரியாக கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்கும் 'கலாச்சார காவல்துறை' மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிப்பதாக அறிவித்துள்ளது.
“ஹிஜாப்” பெண் அடிமைத்தனம்.. இந்தியா - ஈரானில் வெடித்த போராட்டங்களில் “ஒரு” ஒற்றுமை - இயக்குநர் நவீன்
காவல்துறை
இஸ்லாமிய சமயநெறிகளை கறாராக பின்பற்றும் நாடுகளின் பட்டியலில் ஈரானும் ஒன்று. இந்நாட்டில் பெண்கள் 9 வயது முதல் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமயநெறிமுறைகள் சரியாக கடைப்பிடிக்கப்படுகிறதா? என்பதை கண்காணிப்பதற்கு காவல்துறையில் 'கலாச்சாரப் பிரிவு' ஒன்று தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் ஹிஜாப் அணிவது, தொழுகைகளை முறையாக செய்வது ஆகியவை பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிப்பார்கள். மேலும் இஸ்லாமிய மத நெறிமுறைகளை அவமதிக்கும் செயல்பாடுகளையும் கண்காணித்து அதற்கெதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோரை கைது செய்வார்கள்.
உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த 15ம் தேதி குர்திஸ்தானை சேர்ந்த மாஷா அமினி (22) எனும் இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பரிசோதனை செய்த கலாச்சார காவல் குழுவினர், ஹிஜாப்பை சரியாக அணியவில்லையென்று மாஷா அமினி மீது தாக்குதல் நடத்தி கைது செய்தனர். காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கும் தாக்குதல்கள் தொடர்ந்துள்ளன.
போராட்டம்
இதனால் மயக்கமடைந்த மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் கோமாவில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி கடந்த 17ம் தேதி உயிரிழந்துவிட்டார். ஏற்கெனவே நாடு முழுவதும் ஹிஜாப் கட்டாயம் எனும் சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த படுகொலை சம்பவம் இப்போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அமினியின் சொந்த ஊரான சாகேஸ் பகுதியில் அமினியின் கல்லறை அருகே திரளான அளவில் திரண்ட பெண்கள் ஹிஜாபை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மோதல்
கடந்த 18ம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் காட்டு தீயை போல நாடு முழுவதும் பரவியுள்ளது. சுமார் 50 நகரங்களில் தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டக்காரர்கள் இஸ்லாமிய குடியரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல போராட்டக்காரர்களின் தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது.
அழைப்பு
கடந்த சில மாதங்களாகவே இதுபோன்ற அரஜாக நடவடிக்கைகளை 'கலாச்சார காவல்துறையினர்' அதிகரித்து வருகின்றனர். இது தொடர்பாக சில வீடியோக்கள் வெளியாகியுள்ளன. அதில், ஹிஜாபை சரியாக அணியவில்லையென கூறி பெண்களை காவல்துறையினர் கன்னத்தில் அறைவதும், லத்தி கொண்டு தாக்குவதும், அவர்களை கைது செய்து வலுக்கட்டாயமாக காவல்துறை வாகனங்களில் ஏற்றுவதும் தெளிவாக தெரிகிறது. இதனையடுத்து அமினியின் மரணம் குறித்து விசாரணைக்கு ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.
பொருளாதார தடை
மறுபுறத்தில் அமெரிக்கா இந்த 'கலாச்சார காவல்துறை'க்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்துள்ளது. அந்நாட்டு பெண்கள் மீதும், அமைதியாக போராட்டம் நடத்துபவர்கள் மீதும் கொடூரமான அடக்குமுறைகள் ஏவப்படுவதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதனையடுத்து அரசுக்கு எதிராகவும், போராட்டத்தை தூண்டும் விதமாகவும் சமூக வலைத்தளத்தில் பதிவிடப்படும் கருத்துக்களை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் ஈரான் காவல்துறை தெரிவித்துள்ளது.
கனடா வரை பரவிய போராட்டம்
மேலும் போராட்டத்தின் தீவிரத்தை குறைக்கும் விதமாக கடுமையான இணைய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு விதித்துள்ளது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த போராட்டம் தற்போது கனடாவரை நீடித்துள்ளது. பெண்கள் பலர் தங்களது ஹிஜாப்பை கழற்றி தீயிட்டு எரித்தும், குப்பைத் தொட்டியில் வீசியும் வருகின்றனர்.