துபாயில் திருக்குறள் ஒப்புவித்தல் திருவிழா.. உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு
துபாயில் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்கா சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடந்தது.
ஷார்ஜா: துபாய் ஜெபல் அலி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று முன்தினம் துபாய் யாழ் கல்வியகம் மற்றும் அமெரிக்க சாஸ்தா தமிழ் அறக்கட்டளை சார்பில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் சுமார் 250 மாணவர்கள் கலந்து கொண்டு 1330 குறள்களையும் ஒப்புவித்தனர். இது, உலக அளவில் திருக்குறள் ஒப்பித்தலில் மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஐன்ஸ்டீன் வேர்ல்ட் ரெக்கார்ட் நிறுவனத்தின் சார்பில் உலக சாதனை நிகழ்ச்சியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் சார்பில் சதீஷ், கார்த்திக் மற்றும் மோனிகா கலந்து கொண்டு உலக சாதனையை பதிவு செய்தனர். அமீரகத்தின் பல பகுதிகளில் இருந்தும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை திருக்குறள் ஒப்புவித்தல் நடைபெற்றது.

அதிகபட்சமாக 125 குறளை மாணவர் ஜேடன் பிரிஸ் ஒப்புவித்தார். நிகழ்ச்சியை யாழ் கல்வியகத்தின் ஆலோசகர் திரு. நாகப்பன், முதல்வர் திருமதி. ரம்யா, ஒருங்கிணைப்பாளர்கள் தவச்செல்வம், நரேஷ், விக்னேஷ், ஆசிரியர்கள் மற்றும் திருக்குறள் திருவிழா குழுவினர் கார்த்திக், ஹசீனா, கமால் பாட்சா, ஜசீலா, விஐயகுமார், சரண்யா, பிரியதர்ஷினி, ஹீமா நான்சி,
மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

அமெரிக்காவிலிருந்து சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் ராமன் வேலு, ஒருங்கிணைப்பாளர் ராதிகா ஆகியோர் இணையவழி தொடர்பில் ஒத்துழைப்பு நல்கினர். உலக பொதுமறை என போற்றப்படும் திருக்குறள் உலகெங்கும் அறியப்படுவது பெருமையளிக்கிறது என நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் தெரிவித்தனர்.













Click it and Unblock the Notifications