காதலி, மகனுடன் சேர அமெரிக்கா சென்ற லைபீரியர் எபோலாவுக்கு பலி
டெக்சாஸ்: அமெரிக்காவில் எபோலா வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த லைபீரியர் உயிர் இழந்தார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, லைபீரியா, சியர்ரா லியோன், கினியாவில் எபோலா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரி்த்து வருகிறது. இதே வேகத்தில் வைரஸ் பரவினால் அது விரைவில் பிற நாடுகளுக்கும் பரவும் என்று அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் லைபீரியாவைச் சேர்ந்த தாமஸ் எரிக் டங்கன் கடந்த மாதம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகருக்கு வந்தார். அவர் தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற காதலி மற்றும் மகனுடன் சேர டல்லாஸுக்கு வந்தார். வந்த இடத்தில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 28ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தாமஸுக்கு எபோலா காய்ச்சல் இருப்பது பரிசோதனை மூலம் தெரிய வந்தது.
இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் புதன்கிழமை உயிர் இழந்தார். இதை தொடர்ந்து மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வருபவர்களை விமான நிலையித்தில் வைத்து தீவிரமாக பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூடுதல் பரிசோதனை முதலில் இந்த வார இறுதியில் நியூயார்க்கில் உள்ள ஜான் எஃப் கென்னடி விமான நிலையத்தில் நடத்தப்பட உள்ளது. அதன் பிறகு நியூவார்க் லிபர்ட்டி, வாஷிங்டன் டல்லெஸ், சிகாகோ ஓஹேர் மற்றும் ஹார்ட்ஸ்பீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா விமான நிலையங்களிலும் கூடுதல் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.
முன்னதாக மேற்கு ஆப்பபிரிக்க நாடுகளில் வேலை பார்த்த 4 அமெரிக்கர்களுக்கு எபோலா காய்ச்சல் ஏற்பட்டு அவர்கள் சொந்த நாட்டிற்கு திரும்பினர். அந்த 4 பேரும் சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.