பிலிப்பைன்ஸை பீதிக்குள்ளாக்கியிருக்கும் ஹகுபிட் புயல்! 5 லட்சம் பேர் வெளியேற்றம்!!
மணிலா: பசிபிக் கடலில் உருவாகியுள்ள ஹகுபிட் புயல் பிலிப்பைன்ஸை நெருங்கி வருவதால் அந்நாட்டில் 5 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு ஆண்டுக்கு குறைந்தது 20 புயல்கள் தாக்குகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக இச்சம்பவங்கள் நடப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த 13 மாதங்களுக்கு முன்பு இங்கு ஹயான் புயல் கடுமையாக தாக்கியது. அதில் 7,300 பேர் பலியாகினர். 41 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் தற்போது ஹகுபிட் என்ற புதிய புயல் பசிபிக் கடலில் உருவாகியுள்ளது. அது பிலிப்பைன்ஸ் நாட்டை நெருங்கி வருகிறது. அது மணிக்கு 240 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனால் கடும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதால் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமர், லெய்ட் மற்றும் சிபு ஆகிய தீவுகளில் கடற்கரையோரம் உள்ள கிராமங்கள் மற்றும் நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் தங்கியிருக்கும் பொது மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இங்கிருந்து மொத்தம் 5 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர்கள் கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிகள் மற்றும் பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஹகுபிட் புயல் மிரட்டல் காரணமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் 150 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளன. துறைமுகங்கள் மூடப்பட்டுள்ளன. கடல் போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.