கனடாவும் மெக்சிகோவும் ரிலாக்ஸ் பண்ணலாம்.. இப்போதைக்கு ட்ரம்ப் ஒண்ணும் செய்யப் போவதில்லை!
வாஷிங்டன்(யு.எஸ்): நாஃப்தா(NAFTA) என்றழைக்கப்படும் வட அமெரிக்க வணிக ஒப்பந்தத்தை நீக்குவேன் என்று தேர்தலில் சூளுரைத்த ட்ரம்ப் தற்போது பின் வாங்கியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த உடனும், ஒப்பந்தத்தை மதிக்கப் போவதில்லை, அமல் படுத்தப் போவதில்லை என்று கூறிவந்தார்.
நேற்று யு டர்ன் அடித்த ட்ரம்ப், கனடா மற்றும் மெக்சிகோ அதிபர்களுடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார். அப்போது, "நாஃப்தா ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்யப் போவதில்லை.
மூன்று நாடுகளுக்கும் நன்மை ஏற்படும் வகையில் மாற்றங்கள் செய்வோம்.இணைந்து பேச்சு வார்த்தை நடத்துவோம்," என்று கூறியுள்ளார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் மெக்சிகோ அதிபர் என்ரிக் ப்னே நீட்டோவுடன் தனித்தனியாக தொலைபேசியில் பேசியுள்ளார்.
கடந்த வாரம் விஸ்கான்சினில் கூட இந்த ஒப்பந்தம் அமெரிக்க உற்பத்தியாளர்களுக்கு எதிரானது. வாபஸ் பெற்றே தீருவேன் என்று கூறியிருந்தார்.
அதை நிறைவேற்ற அதிபரின் உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வந்தது. கட்சிக்குள் எதிர்ப்பும் கிளம்பியது.
நாஃப்தா ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெற்றே தீருவேன் என்ற ட்ரம்ப், நேற்று மென்மையான போக்கைக் கடைப்பிடித்துள்ளார்.
ஒப்பந்தத்திலிருந்து வெளியேறினால், அமெரிக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் பொருட்களின் விலை அதிகரிக்கும். அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் போன்ற புள்ளி விவரங்கள் ட்ரம்புக்கு தெரியப்படுத்தப்பட்டன.
அரிசோனா செனட்டர் ஜான் மெக்கெய்ன் மற்றும் நெப்ராஸ்கா செனட்டர் பென் சாசே ஆகிய இரண்டு குடியரசுக் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஆட்சியில் அமர்ந்து 100 வது நாளைத் தொட இருக்கும் நிலையில், நாஃப்தா ஒப்பந்தத்தில் மறு சீர்திருத்தம் செய்வோம் என்ற அறிவிப்புடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றியதாக காட்டியுள்ளார்.
ஒபாமா முன்னேற்பாடுகளைச் செய்து கையெழுத்திட தயார் நிலையில் விட்டுச்சென்ற பசிபிக் வணிக ஒப்பந்தத்தை ட்ரம்ப் கைவிட்டு விட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.
-இர தினகர்