கனடாவின் 150 பிறந்தநாளுக்கு அதிபர் ட்ரம்ப், எலிசபெத் மகாராணி வாழ்த்து!
ஆடவா(கனடா). கனடா நாட்டின் 150 வது பிறந்த நாளுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
'அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கனடா கவர்னர் ஜெனரல் டேவிட் ஜான்ஸ்டனுக்கு (இந்தியக் குடியரசுத் தலைவருக்கு நிகரானவர்) வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.

அமெரிக்கா கனடாவுடனான நல்லுறவை பேணிக்காத்து போற்றுகிறது. நம்முடைய இரண்டு நாடுகளைப் போல் தொடக்கம் முதல் இணக்கமான உறுதியான உறவை கட்டிக்காக்கும் நாடுகள் வேறு எதுவும் இல்லை.
போர்க்காலங்களிலும் அமைதிக்காலங்களிலும் வளர்ச்சியிலும், சோதனைக்காலத்திலும் கனடாவும் அமெரிக்காவும் இணைந்து நின்று சாதித்துள்ளோம்.
உலகின் மிகவும் நீளமான எல்லையை கொண்டிருக்கும் நமது இரண்டு நாடுகளும், பரஸ்பர நல்லெண்ணத்தை பேணிக்காத்து வருகிறோம்' என்று வாழ்த்துச் செய்தியில் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இங்கிலாந்து ராணி எலிசபெத் கனடியர்களுக்கு வீடியோ மூலம் சிறப்பு வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். கனடா, அனைவரையும் வரவேற்கும், உரிய மரியாதை அளிக்கும், கனிவுடன் கவனித்துக் கொள்ளும் நாடாகும்.
'ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் நூற்றாண்டு விழாவின் போது, சமத்துவம், சுதந்திரம், இணக்கத்துடன் அரவணைத்தல் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு வாழ்த்தினேன்.
கனடியர்கள் இந்த மூன்று முக்கிய அம்சங்களிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள். வருங்காலங்களில் உலகத்திற்கு இந்த மூன்றையும் நினைவூட்டி முக்கிய பங்காற்றும் என நம்புகிறேன். மிகவும் இளமையான நாடாக இருந்த போதிலும் மிகவும் பொறுப்புணர்ச்சி மிக்க நாடாக கனடா சிறப்புற்றுள்ளது,' என்று ராணி எலிசபெத் வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.
பிரிட்டிஷ் பார்லிமென்டரி முறைப்படி இயங்கும் கனடாவுக்கு இப்போதும் எலிசபெத்-தான் மகாராணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகத் தலைவர்கள் கனடாவுக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பி வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
- இர தினகர்












Click it and Unblock the Notifications