மெக்சிகோ எல்லையில் மதில் சுவர்.. உத்தரவிட்ட ட்ரம்ப்! சட்ட விரோத குடியேற்றம் தடுக்க அதிரடி
வாஷிங்டன்: சட்ட விரோத குடியேற்றத்தை தடுப்பதற்காக, அண்டை நாடான மெக்சிகோ எல்லையில் பெரிய சுவரை எழுப்ப உத்தரவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது தீவிரவாதம், சட்ட விரோத குடியேற்றம் போன்றவற்றுக்கு எதிராகத்தான் கடுமையாக பேசி வந்தார் டொனால்ட் ட்ரம்ப்.
அதிபராக பதவியேற்ற ட்ரம்ப், இதற்கான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் சட்ட விரோத குடியேறிகள் உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக லத்தின் அமெரிக்க நாடுகளில் இருந்துதான் குடியேறியுள்ளனர்.
இதை கருத்தில் கொண்டு அண்டை நாடான மெக்சிகோ எல்லையில் சுவரை எழுப்ப ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். புதிதாக 5000 எல்லை பாதுகாப்பு படையினரையும் நியமித்துள்ளார்.
எல்லையில்லாத நாடு ஒரு நாடே கிடையாது என்று உள்துறை அதிகாரிகளிடம் ட்ரம்ப் தெளிவாக தெரிவித்துள்ளார். மெக்சிகோவுடன் நட்பை தொடரும் அதே வேளையில், சட்ட விரோத குடியேற்றங்களை தடுக்கவே இந்த நடவடிக்கை என கூறியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப். இதனிடையே மெக்சிகோ அரசோ, சுவரை நம்பி வாழும் நாடு நாங்கள் இல்லை என்று கூறியுள்ளது.