தரைமட்டமான துருக்கி! நிலநடுக்கத்தால் நூற்றாண்டின் "பேரழிவு!" 15000ஐ தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை
துருக்கி நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் திங்கள் அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் பலரும் தூங்கிக் கொண்டிருந்த போது நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்களால் உடனே பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல முடியவில்லை
துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கமாக இது பார்க்கப்படுகிறது. துருக்கி மட்டுமின்றி சிரியா நாட்டிலும் இந்த நிலநடுக்கம் மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

நிலநடுக்கம்
திங்கள்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆக இருந்தது. அன்றைய தினமே 7.5 மற்றும் 6 ரிக்டர் அளவுகோல் 24 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக அங்கு மோசமான பாதிப்பு ஏற்பட்டது. முதல் நிலநடுக்கத்திலேயே பல கட்டிடங்கள் சரிந்தன. முதல் நிலநடுக்கத்தில் தப்பிய கட்டிடங்கள் கூட அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் தரைமட்டமானது. இக்கட்டான நிலையில் இருக்கும் துருக்கி நாட்டிற்கு உதவுவதாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அறிவித்துள்ளன.

15 ஆயிரத்தை தாண்டியது
ஈடுபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் மீட்புக் குழுக்களையும் அனுப்பியுள்ளனர். இதற்கிடையே மீட்புப் பணிகள் தொடர்ந்து நடக்கும் நிலையில், துருக்கி, சிரியா நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது.. துருக்கி நாட்டில் மட்டும் இதுவரை 12,931 பேரும் சிரியாவில் 2992 பேரும் இந்த நிலநடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,383ஆக உயர்ந்துள்ளது.

அச்சம்
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.. இன்னுமே கூட கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அவர்கள் சிக்கியுள்ள இடங்களைக் கண்டறிந்து, பத்திரமாக மீட்கும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.. இதற்கிடையே கடுமையான குளிரும் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபடுவோருக்குச் சவாலைக் கொடுத்து வருகிறது.

உதவி
நிலநடுக்கத்தால் திணறி வரும் துருக்கி நாட்டிற்கு உலகின் பல்வேறு நாடுகளும் உதவிக்கரம் நீட்டியுள்ளன. அதேநேரம் மீட்புப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என்று உள்நாட்டிலேயே புகார்கள் எழுந்துள்ளன. இதில் சற்று குறைபாடுகள் உள்ளதை ஒப்புக் கொள்வதாகத் தெரிவித்த துருக்கி அதிபர், மீட்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.

மோசமான பாதிப்பு
பொதுவாக நிலநடுக்கத்தை விட அதன் பிறகு ஏற்படும் நில அதிர்வுகளில்தான் (aftershocks) அதிக பாதிப்பு ஏற்படும். ஏனென்றால் முதல் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்த பலவீனமான கட்டிடங்களும் கூட இதில் தரைமட்டமாகிவிடும்.. துருக்கியில் முதலில் பதிவான நிலநடுக்கத்திற்குப் பின், ரிக்டரில் 4க்கு மேலான 100க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் (aftershocks) பதிவு செய்யப்பட்டது. நேரம் செல்ல செல்ல இந்த நிலநடுக்கத்திற்கு பிந்தைய நில அதிர்வுகளின் எண்ணிக்கையும் வலிமையும் தொடர்ந்து குறைந்தே வரும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications