உடலில் பொறித்துள்ள டாட்டுக்களை அகற்றுங்கள்... துருக்கி இஸ்லாமிய அமைப்பு பத்வா
அன்காரா: நாகரீகம் மற்றும் அழகுக்காக உடலில் பொறித்துள்ள டாட்டுக்களை துருக்கியில் வசிக்கும் முஸ்லிம்கள் அகற்ற வேண்டும் என்று அந்த நாட்டுக்கான உயர்மட்ட இஸ்லாமிய அமைப்பு தியானெட் பத்வா பிறப்பித்துள்ளது.
ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு நடுவில் அமைந்துள்ள அழகான நாடு துருக்கி. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், மதசார்பற்ற நாடு என்றே துருக்கி அறியப்பட்டுவருகிறது. இங்குள்ள ஆண்களும், பெண்களும் நாகரீகத்தில் உயர்ந்தவர்கள். இந்நாட்டின் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் டாட்டு எனப்படும் பச்சைகுத்திக் கொள்ளும் மோகம் அதிகம்.
கடவுளிடம் மன்னிப்பு கேளுங்கள்
ஆனால் இவ்வாறு டாட்டு பொறித்துக்கொள்வது இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று கூறி, உடனடியாக டாட்டுக்களை அகற்றுமாறு பத்வா பிறப்பித்துள்ளது அந்த நாட்டின் இஸ்லாமிய உயர் அமைப்பான தியானெட். ஒருவேளை பொறித்த டாட்டுவை அகற்ற முடியாத நிலை இருந்தால், கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பத்வா அறிவுறுத்துகிறது.
ஆபரேசன் செய்தாவது அகற்றுங்கள்
"டாட்டுவை அகற்ற முடிந்தால் அதை அகற்றிவிடுங்கள். அல்லது டாட்டுவை பொறித்துக் கொண்ட ஆணோ, பெண்ணோ கடவுளின் முன்னாள் மன்றாடி மன்னிப்புக் கேட்டுக்கொள்ளுங்கள். உடலில் மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான அழகு கலைகளையும் இறைதூதர் முமகது தடை செய்துள்ளார். எனவே லேசர் மூலமாகவோ, அல்லது அறுவை சிகிச்சை செய்தோ உடலிலுள்ள டாட்டுவை அகற்றுவதே நல்லது.
தாடியை கூட அகற்ற கூடாது
இறைவன் படைத்த உடல் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துவோர், அல்லாவின் சாபத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்று நமது இறை தூதர் கூறியுள்ளார். எனவே, முகத்தில் இருந்து முடியை அகற்றுவதோ, கண்புருவத்தை திருத்துவதோ கூடாது. வெள்ளை முடியை கறுப்பாக்க மை பூசக்கூடாது" இவ்வாறு அந்த பத்வாவில் கூறப்பட்டுள்ளது.
கட்டாய புகுத்தலா?
துருக்கி நாட்டில், கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகளாக மாற்றப்பட்டுவருவதாகவும், மதசார்பற்ற தன்மை மறைந்து இஸ்லாமிய நாடாக மாற்றும் முயற்சிகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த பத்வா முக்கியத்துவம் பெறுகிறது. துருக்கியின் அதிபர் ரிசெப் தாயிப் எர்டோகன் கூட, சமீபத்தில், டாட்டுக்களுக்கு எதிராக கருத்து கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.