பாக்.ல் கிறிஸ்தவ தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல்: 45 பேர் பலி
பெஷாவர்: பாகிஸ்தானில் இரு இடங்களில் தேவாலயங்களை தற்கொலைப்படையினர் தாக்கியத்தில் 45க்கும் அதிகமானோர் பரிதாபமாகப் பலியானார்கள்.
இன்று ஞாயிற்றுக்கிழமையாகையால், கிறிஸ்தவர்கள் தேவாலயங்களுக்கு பிரார்த்தனை செய்ய செல்வது வழக்கம். அந்த வகையில், பாகிஸ்தான் பெஷாவர் நகர் கீசா கவானி பஜாரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் இன்று 600 பேர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
பின்னர், பிரார்த்தனை முடிந்து மக்கள் தேவாலயத்தை விட்டு வெளியே வந்தபோது அவர்களை குறிவைத்து இரு இடங்களில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இக்கொடூரத் தாக்குதலில் சிக்கி சுமார் 45 பேர் பலியானார்கள். படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப் பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அங்கு உடனடியாக அவசரநிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது. அப்பாவி பொதுமக்களை குறிவைத்து இதுபோன்ற தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டது இஸ்லாத்திற்கு எதிரானது' எனத் தெரிவித்துள்ளார்.