ஈராக் விவகாரத்தில் "பெரிய சாத்தானுடன்" கை கோர்க்கிறது ஈரான்?
தெஹ்ரான்: ஈராக் உள்நாட்டுப் போர் உச்சகட்டம் அடைந்துள்ள நிலையில் 35 ஆண்டுகள் எதிரிகளாக இருக்கும் ஈரானும் அமெரிக்காவும் இப்போது கை கோர்க்கும் நிலை உருவாகி உள்ளது.
1979ஆம் ஆண்டு ஈரானில் இஸ்லாமிய புரட்சி ஏற்பட்டது. அப்போது அமெரிக்க ஆதரவு ஷா முகமது ரெஜா பால்வி அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார். அப்போது முதல் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே பகைதான்.
கடந்த பல ஆண்டுகளாக ஈரான் -அமெரிக்கா இடையேயான உறவு படுமோசமான நிலைக்கும் போனது. குறிப்பாக அணு ஆயுத விவகாரத்தில் ஈரானை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தது அமெரிக்கா.
சாத்தான் - தீமை
குறிப்பாக அமெரிக்காவை பெரிய சாத்தான் என்று விமர்சித்தது ஈரான். அதேபோல் ஈரானை தீமைகளின் மைய அச்சு என்று அமெரிக்காவும் விமர்சித்தது.
3வது உலகப் போர்
ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து 3வது உலகப் போர் நடைபெறுமோ என்று பதற்றம் ஏற்படுத்திய தருணங்கள் பல.. ஆனால் காலங்கள் உருண்டோட காட்சிகளும் இப்போது மாறிவிட்டன.
ஈராக் நிலைமை
ஈரானில் ஷியா முஸ்லிம்கள்தான் பெரும்பான்மையினர். அதே நிலை ஈராக்கிலும்தான். ஆனால் ஈராக்கில் இப்போது சன்னி முஸ்லிம்களின் ஐ.எஸ்.ஐ.எஸ். படை கை ஓங்கி வருகிறது.
கர்பாலா கவலை
குறிப்பாக ஷியா முஸ்லிம்களின் புனித நகரமான கர்பாலாவை நோக்கி முன்னேறுவோம் என்று ஐ.எஸ்.ஐ.எஸ். அறிவித்திருப்பது ஈரானை பதற வைத்துள்ளது. இதனாலேயே ஈராக் நாட்டுக்கு தமது படைகளை அனுப்புகிறோம் என்று ஈரான் அறிவித்தது.
அமெரிக்கா நிலை
அதே காலகட்டத்தில் ஈராக் நாட்டுக்கு உதவும் வகையில் அமெரிக்காவும் வான்வழித் தாக்குதல் உள்ளிட்ட ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் - அமெரிக்கா
அப்படி அமெரிக்கா ராணுவம் ஈராக்குக்கு உள்ளே சென்றால் அது ஈரானுடன் இணைந்துதான் சன்னி ஆயுதப் படையை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். இப்போது அமெரிக்காவும் ஈரானும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து மாறி மாறி பேட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.
35 ஆண்டுகால எதிரிகள் ஒன்றிணைந்து ஈராக் போர்க்களத்தில் கரம் கோர்ப்பதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றே கூறப்படுகிறது.