கடைக்குள் உட்கார்ந்து பால் கொடுத்த பெண்ணிடமிருந்து குழந்தையை பறித்துச் சென்ற பாதுகாவலர்
லண்டன்: இங்கிலாந்தில் பரபரப்பான கடை ஒன்றில் குழந்தைக்கு பால் கொடுத்ததற்காக தாயிடம் இருந்து குழந்தையை இரக்கமின்றி பிடுங்கிச் சென்ற பாதுகாவலர் மீது, சம்பந்தப்பட்ட தாய் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இங்கிலாந்தைச் சேர்ந்தவர் கரோலின் ஸ்டார்மர். நான்கு குழந்தைகளுக்குத் தாயான இவர் , சூப்பர்மார்க்கெட் ஒன்றிற்கு தனது ஒன்பது மாதக் குழந்தையுடன் சென்றுள்ளார்.
கடையில் வைத்து பால் கொடுத்தார்
அப்போது அவரின் குழந்தை பசியால் அழவே, அங்கு வைத்தே அக்குழந்தைக்கு அவர் தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
பக்கத்திலேயே நின்ற பாதுகாவலர்
ஆனால், அக்கடையின் பாதுகாவலர் கரோலின் அருகே நகராமல் நின்றுள்ளார். கரோலின் அவரை விலகிப் போகச் சொல்லியும் அவர் நகரவில்லை.
பறித்துச் சென்ற கொடுமை
மேலும், அக்கடையில் வைத்து குழந்தைக்கு பால் கொடுக்கக் கூடாது என கூறிய அந்நபர், தடாலடியாக பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையை கரோலினிடமிருந்து பிடுங்கியுள்ளார்.
வெளியே வந்தால்தான் தருவேன்
குழந்தையுடன் கடையை விட்டு வெளியே சென்ற அவர், குழந்தை தேவையென்றால் கரோலினும் வெளியே வர வேண்டும் என மிரட்டியுள்ளார்.
பேஸ்புக்கி் கொந்தளிப்பு
இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்தார் கரோலின். மேலும், இது தொடர்பாக அவர் போலீசிலும் புகார் அளித்தார். கரோலினின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மன்னிப்பு கேட்ட மார்க்கெட்
நடந்த சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட சூப்பர்மார்க்கெட் மன்னிப்பு கோரியுள்ளது. அதோடு, தங்களது கடையில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்ட அனுமதி உண்டு எனவும் அந்த சூப்பர்மார்க்கெட்டின் டிவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.